அமைச்சர் எ.வ.வேலு
நாமக்கல், ஜன. 9- தமிழ்நாட்டில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,350 கி.மீ. தொலைவுக்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்; 650 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தமிழ்நாடு விரிவான சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் புறவழிச் சாலை திட்டம் 23 கி.மீ. தொலைவுக்கு ரூ. 400 கோடியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக முதலைப்பட்டி முதல் புதிய பேருந்து நிலையம் வரை பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதையடுத்து, மரூர்பட்டி முதல்- வேட்டாம்பாடி வரை, வேட்டாம்பாடி முதல்- வசந்தபுரம் வரை ரூ. 95.12 கோடியில் இரண்டு புறவழிச் சாலைகள் முடிவுற்ற நிலையில், மாநில பொதுப் பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு 7.1.2026 அன்று வேட்டாம்பாடியில் நடைபெற்ற விழாவில் சாலைகளை திறந்துவைத்தார். மேலும், வசந்தபுரம் முதல் லத்துவாடி, லத்துவாடி -முதல் வள்ளிபுரம் வரை ரூ. 103 கோடியில் இரு புறவழிச் சாலைகள் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவுக்கு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினர் பெ.ராமலிங்கம், மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய சாலை திட்டப் பணிகளை தொடங்கிவைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
புதிய சாலைகள்
2021-இல் திமுக ஆட்சியமைந்தபோது நெடுஞ்சாலைத் துறையை என்னிடம் வழங்கிய முதலமைச்சர், கிராமப்புற மக்கள் நலனுக்கான சாலைகளை அமைக்க வேண்டும் என்றார். அதன்படி, தமிழ்நாட்டில் 2,000 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,350 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 650 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் 1,281 தரைப்பாலங்கள் உள்ளன. இந்த இடங்களில் உயர்நிலை பாலம் அமைக்க முலமைச்சர் உத்தரவிட்டார். அவற்றில், 1,100 உயர்நிலை பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 59 பாலங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 22 பாலங்களுக்கு நிதித் துறையில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன், பரமத்தி வேலூர் – ஜேடர்பாளையம் இருவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதற்கான திட்ட மதிப்பீடு தயார்செய்து நான்குவழிச் சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல்லில் புதிய புறவழிச்சாலைகள் தரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு இந்த புதிய சாலைகள் வலுவுடன் இருக்கும்.
நாமக்கல் புறவழிச் சாலை முழுமை பெறுவதற்கு மரூர்பட்டியில் கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவடைய வேண்டும். ரூ. 119 கோடியில் 5 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 35 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் முடிவுற்று ஜூலை மாதம் ரயில்வே பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கோழி மற்றும் முட்டை உற்பத்தி மாவட்டங்களில் நாமக்கல் முதன்மையாக விளங்குகிறது. சரக்கு வாகனங்களுக்கான கூண்டுகட்டும் தொழில், கோழிப் பண்ணைகள், விவசாயம், சுற்றுலா என பல்வேறு வாய்ப்புகளை இந்த மாவட்டம் கொண்டுள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புறவழிச் சாலையால் நாமக்கல் நகருக்குள் நெரிசல் குறைந்து, விபத்து தவிர்க்கப்படுவதோடு, சுற்றுப்புற கிராமங்கள் அனைத்தும் பயன்பெறும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், துணை மேயர் செ.பூபதி, தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) பி.செந்தில், கண்காணிப்புப் பொறியாளர் என்.எஸ்.சரவணன், கோட்டப் பொறியாளர் கே.அகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
