கராகஸ், ஜன. 7– அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவரின் மகன் நிகோலஸ் மதுரோ குய்ர்ரா.
அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்தது. நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பதவி ஏற்று உள்ளார்.
வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பொறுப்பேற்ற பிறகு கூடிய நாடாளுமன்றப் பேரவையில் நிகோலஸ் மதுரோ மகன் குய்ர்ரா மதுரோ உரையாற்றினார். இடைக்கால அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் குறிப்பிட்டு உறுதி மொழி எடுத்துகொண்டார்.
பின்னர் தனது தந்தை நாடு கடத்தப்பட்டுள்ளது குறித்து அவர் பேசியதாவது,
“தந்தையே, உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நமது குடும்பத்தில் உள்ள அனைவரையும் வலிமையுடையவர்களாக நீங்கள் மாற்றியுள்ளீர்கள். நீங்கள் திரும்பும் வரை நாட்டு மக்களுக்கான கடமைகளைச் செய்வோம். நம் தாய் நிலம் மேன்மையான மக்களின் கையில்தான் உள்ளது. தந்தையே, வெனிசுலா நிலத்தில் நான் விரைவில் உங்களை கட்டியணைப்பேன். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
என் தாய் சிலியாவும் என்னை விரைவில் தாய் நிலத்தில் சந்திப்பார். தாய் நிலத்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்வீர்கள். தாய் நாட்டிற்கு என்ன வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். நீங்கள் என்றுமே வெனிசுலாவின் தலைவர்தான்” எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிகோலஸ் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அதே நாளில், குய்ர்ரா இவ்வாறு பேரவையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
