“ஹிந்து தர்மத்தின் வழிபாட்டு முறைகள் மற்றும் விழாக்களை நடத்துவதில் காலமுறை மிக முக்கியமானது” என்று வாதிடும் ஹிந்து அமைப்புகள், ரத யாத்திரை விவகாரத்தில் ‘இஸ்கான்’ அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. (‘தினமலர்’, 6.1.2026 பக்.10)அதே வேளையில், குறிப்பிட்ட நாளில் மட்டுமே கொண்டாடப்பட வேண்டிய கார்த்திகைத் தீபத்தை எப்போது வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என இதே அமைப்புகள் முண்டாசு கட்டுவது முரண்பாடு இல்லையா?
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை, ஆண்டுதோறும் ஜூன் – ஜூலை மாதங்களில் சாஸ்திரப்படி நடைபெறுவது வழக்கம். ஆனால், பன்னாட்டு கிருஷ்ண பக்தர்கள் அமைப்பான ‘இஸ்கான்’, உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் இந்த ரத யாத்திரையைத் தன்னிச்சையான தேதிகளில் நடத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து விவாதிக்க பூரியில் நடைபெற்ற 24 நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்ற மாநாட்டில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
வேதங்கள் மற்றும் புராண முறைப்படி அல்லாமல், காலம் தவறி ரத யாத்திரை நடத்துவதை ஏற்க முடியாது.
பூரி கோயில் மட்டுமே ‘ஜெகநாதர் தாம்’ என்று அழைக்கப்படத் தகுதியானது. மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலை அவ்வாறு அழைப்பது தவறானது.
‘இஸ்கான்’ அமைப்பின் இத்தகையச் செயல்களுக்கு எதிராக உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனப் பூரி சங்கராச்சாரியார் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘இஸ்கான்’ அமைப்பு ரத யாத்திரையை நிதி வசூலுக்காகவும், தங்களுக்குச் சாதகமான தேதிகளிலும் நடத்துவதாக ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இருப்பினும், மற்றொரு புறம் “கார்த்திகைத் தீபம் என்பது கார்த்திகை மாதத்தில் மட்டுமே ஏற்றப்பட வேண்டிய ஒன்று” என்ற விதியைத் தளர்த்தி, அதை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம் எனச் சில அமைப்புகள் போராடுவது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
“ஒரு விழாவுக்குக் காலமுறை அவசியம் என்று சொல்லும் அதே வேளையில், மற்றொரு விழாவுக்குக் காலம் முக்கியமில்லை என்று கூறுவது – ஹிந்து அமைப்புகளின் இரட்டை நிலையைக் காட்டுகிறது” எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
திவ்யசிங்கா தேவ் (நிர்வாகக் குழு தலைவர்): “சாஸ்திரப்படி வெளிநாடுகளில் ரத யாத்திரை நடக்காதது கவலையளிக்கிறது. காலம் தவறிய யாத்திரையை ஏற்க முடியாது” என்கிறார்.
“உலகம் முழுவதும் ஒரே நாளில் யாத்திரை நடத்துவது நடைமுறை ரீதியாகச் சாத்தியமில்லை” எனத் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளது. இஸ்கான் அமைப்பு.
இஸ்கான் அமைப்பினர் நடத்திய ரதயாத்திரையின் போது திரிபுரா தலைநகர் அகர்தலாவில் மின்சாரம் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பினர் உலகம் முழுவதும் ஜெகநாதர் யாத்திரை என்று நடத்தி வசூல் செய்கின்றனர். கோயில் நிர்வாகம் மட்டுமே நடத்தும் யாத்திரையை இஸ்கான் அமைப்பினர் நடத்துவதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
‘கோயில் என்பதே வியாபாரக் கடை’ என்று ஆகிவிட்ட பிறகு இத்தகைய முரண்பாடு ஏற்படத்தானே செய்யும்? இதை மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியே ‘திருவாய்’ மலர்ந்துள்ளார்.
இன்னும் ஒரு முக்கிய தகவல் ‘பூரி ஜெகந்நாதர் கோயில் என்பது முன்னாள் புத்தர் கோயில்’ என்று சொல்லியிருப்பவர் சாட்சாத் விவேகானந்தரே!
(ஆதாரம்: The ‘Sages of India’. தொகுதி 3)
“உண்டியலில் பணத்தைப் போடாதீர்கள் – அர்ச்சகரின் தட்டில் போடுங்கள்” என்று சட்டத்துக்கு விரோதமாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லுவது எதைக் காட்டுகிறது? எல்லாம் பார்ப்பன சுரண்டல் ம(ய்)யம் தான்!
‘கோயிலில் தட்சணை கூடாது’ என்று கொஞ்ச காலம் சப்தம் போட்டுக் கொண்டிருந்தாரே வி.எச்.பி. தலைவர் வேதாந்தம் – கொஞ்ச நாட்களாக அந்தக் குரல் கேட்கவில்லையே – ஏன்?
இதுதான் அவர்களது பார்ப்பனத் தந்திரம்.
