சென்னை, ஜன.7– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்ற அமைச்சர வைக் கூட்டத்தில், புதிய ஓய்வூதியம் உட்பட முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நேற்று (6.1.2026) காலை 11.15 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், தலைமைச் செயலர், நிதி, சுற்றுலா, பண்பாடு, தொழில் துறை செயலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், ‘உங்கள் கனவை சொல்லுங்க’ என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அத்துடன், அரசு அறிவித்த ‘புதிய தமிழ்நாடு – உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், ஜன.20ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிக்க வேண்டிய உரை, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அத்துடன், தமிழ்நாடு அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை, 4 புதிய தொழில் திட்டங்களுக்கான ஒப்புதல், சலுகைகள் தொடர்பான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.
‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம்
‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:
‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்துக்காக 50 ஆயிரம் தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று, படிவங்களில் பெயர், விவரங்களை பெற்று 10 வகையான திட்டங்களில் பயன்பெறுவது குறித்து பதிவு செய்வார்கள். அதன்பின் 3 முத்தாய்ப்பான திட்டங்கள் (கனவுகள்) குறித்து அவர்களை குறித்துத் தர கேட்பார்கள். இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் அதே குடும்பத்திடம், படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண், கையெழுத்து ஆகியவற்றை பெற்று பிரத்யேக செயலியில் பதிவு செய்கிறோம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிரத்யேகமான ‘குறியீட்டு எண்’ உருவாக்கப்படும். அந்த எண்ணை கனவுஅட்டையில் பதிவு செய்து குடும்பத்தினரிடம் அளித்து விடுவோம்.
மேலும் ‘விஷன் டாக்குமென்ட்’ தயாரிக்க உள்ளோம். இளைய சமுதாயத்தினரிடம் 4 கனவு சார்ந்த திட்டம் குறித்து கேட்டுப் பெற உள்ளோம். ஜன.9இல் பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
