அரியானா மாநிலத்தில் குர்மீத் ராம் ரஹிம்சிங் என்பவர் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் சாமியார் ஆவார்.
2017ஆம் ஆண்டில் இரு பெண் சீடர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் 20 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார். அது மட்டுமல்ல – பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்திரபதி கொலை வழக்கிலும் தண்டனை பெற்றவர் ஆவார்.
2017இல் சிறைத் தண்டனை பெற்ற இவர் 15 முறை பிணையில் வெளி வந்துள்ளார் என்றதை நம்ப முடியுமா? ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.
தற்போது 40 நாள்கள் பரோலில் வெளியே வந்துள்ள குர்மீத் ராம் ரஹீம், சிர்சாவில் உள்ள ‘தேரா கச்சா சவுதா’ தலைமையகத்தில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.
அரியானாவின் சுனாரியா சிறைச் சாலையில் இருந்து பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் பரோலில் வெளி வந்தார் குர்மீத் ராம். இவர் பல்வேறு காரணங்களுக்காக பரோல் பெற்று வருகிறார். கடந்த முறை, ஆகஸ்ட் மாதம் அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 40 நாள்கள் பரோலில் வந்திருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று முறை குர்மீத் ராமுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் பிப்.21 நாள்கள், ஜூன் மாதம் 30 நாள்கள், அக்டோபரிலிருந்து தொடர்ந்து40 நாள்கள், 2023ஆம் ஆண்டில் ஜனவரியிலிருந்து 40 நாள்கள், ஜூலையில் 30 நாள்கள், நவம்பரில் 21 நாள்கள், 2024ஆம் ஆண்டில் ஜனவரியில் 20 நாள்கள், அக்டோபரில் 30 நாள்கள் எனத் தொடர்ந்து பல முறை பரோலில் வெளி வந்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான பிணையில் வெளிவரும் கணக்கு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியிருக்கிறது. இவர் 40 நாள்கள் பரோல் முடிந்து பிப்ரவரி மாதம்தான் சிறைக்குச் செல்வார்.
இதுவரை தண்டனைக் காலங்களில் 405 நாள்கள் சிறைக்கு வெளியே பரோலில் இருந்துள்ளார். பரோலில் வெளியே வருபவர், கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது. ஆனால், இவரோ காணொலி வாயிலாக இவரது தொண்டர்களைச் சந்திப்பார். ஓரிடம் என இல்லாமல் பரோல் காலங்களில் பல இடங்களிலும் தங்கியிருப்பார்.
ஏற்ெகனவே, கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட குர்மீத் ராமுக்கு, கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் நடந்த வன்முறையில் 40 பேர் பலியாகினர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீமிற்கு அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது, தேர்தல் காலங்களில் அவருக்கு அடிக்கடி பரோல் வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டிலிருந்து அரியானா சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பரோல் வழங்கப்பட்டது. 2020 முதல் 2024 வரை அவர் 259 நாட்கள் பரோலில் இருந்துள்ளார், விரைவில் அரியானா உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும் நிலையில் மீண்டும் பரோலில் வெளியே வந்துள்ளார்.
சாமியாருக்கு இந்தியா, இங்கிலாந்து, கரிபியன் தீவு, கனடா, அமெரிக்க மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் இந்திய ரூபாய் மதிப்பில் 4000 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட ஒழுங்கைப் பற்றியும், நீதிபரிபாலனம் பற்றியும் பாரதீய ஜனதா வட்டாரம் நீட்டி முழங்குவதில் மட்டும் குறைச்சல் இல்லை.
‘கடவுள்’, ‘மதம்’, ‘ஆன்மிகம்’ என்று சொன்னால் அல்லது அவற்றிற்கு ஒத்தூதிப் போனால் அந்தப் போர்வையில் எந்தப் ‘பஞ்சமா பாதகத்தையும்’ பிஜேபி ஆளும் மாநிலங்களில் செய்யலாம் – நீதிமன்றம் தண்டனை விதித்தாலும் சிறையில் சொகுசாக வாழலாம். நினைத்த போதெல்லாம் பிணையில் வெளியே வரலாம்.
இந்திய சிறைகள் மற்றும் சிறைவாசிகள் சட்டம் (1894) பிரிவு 6இன்படி மாதம் 3 நாட்கள் வரை ஃபரோல் வழங்கலாம். ஆனால், இந்த அரியானா சாமியாருக்கு அரசியல் காரணங்களுக்காகக் கண்மூடித்தனமாக பிணை வழங்கப்படுவதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குப் பெயர்தான் பிஜேபி (ஆட்சி) மாடல்!
ஒரு பட்டப் பகலில் பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்? அதில் முதன்மையானவர்கள் யார் என்பதெல்லாம் கண்ணுக்குத் தெரிந்ததுதான்!
ஒரே ஒரு குற்றவாளியாவது தண்டிக்கப்பட்டதுண்டா? தண்டிக்கப்படாதது மட்டுமல்ல – முக்கிய துறைகளை வகிக்கும் ஒன்றிய அமைச்சர்களாகவே கோேலாச்ச வில்லையா?
ஹிந்து ராஷ்டிரம் என்பது இதுதான் – புரிந்து கொள்வீர்!
