புதுடில்லி, ஏப்.26 பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மீது சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
குஜராத் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பூர்னேஷ் மோடி தொடர்ந்த இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் 23-ஆம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் காந்தி அவரது வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராகுல் காந்தி பிணை பெற்றுள்ளார் இதற்கிடையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் செசன்ஸ் நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.அந்த உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று (25.4.2023) மனு தாக்கல் செய்துள்ளார். அதை காங்கிரஸ் கட்சி வழக்குரைஞர் பி.எம்.மங்குகியா உறுதிசெய்துள்ளார்.
மூளைச்சாவு அடைந்த நபரின்
உடல் உறுப்புகள் 5 பேருக்கு கொடை
சென்னை, ஏப் 26 மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் கொடையில் 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
திண்டிவனத்தை சேர்ந்த 40 வயது நபர், கடந்த வாரம்சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர், மேல் சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள எம் ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை கொடை செய்ய உறவினர்கள் முன்வந்தனர். அவரது நுரையீரலை இதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 54 வயது நோயாளிக்கு மருத்துவர்கள் பொருத்தினர். கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதய வால்வுகள் மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 4 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.