1965இல் தமிழ்நாட்டை குலுக்கிய – ஹிந்தித் திணிப்புக்கு எதிரான வரலாறு காணாத மொழிப்போர் போராட்ட முன்னணி தளபதிகளில் ஒருவரும், திராவிட இயக்கத்தின் கொள்கைப் பாசறை செம்மலும், தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறந்த பேச்சாளரும், கருத்தாளரும், எழுத்தாளரும், திராவிட இயக்கத்தின் கொள்கைச் செல்வங்களில் ஒருவருமான ‘எல்.ஜி.’ என்று அனைவராலும் அழைக்கப்படும் மானமிகு எல்.கணேசன் எம்.ஏ., பி.எல். அவர்கள் (வயது 92) கண்ணந்தங்குடி கீழையூர் என்ற கிராமத்திலிருந்து படித்துப் புகழ் அடைந்தவராவார்.
இன்று (4.1.2026) காலை அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நம்மிடமும், தாய்க் கழகத்தின் மீதும் மிகுந்த பற்றும், அன்பும் கொண்டவர்.
உரத்தநாடு மற்றும் பல பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், பரிந்துரைத்துவாழ்வை மேம்படுத்தியவருமான நமது எல்.ஜி. அவர்கள் நல்ல பண்பாளர் – மனதிற்பட்டதை மறைக்காமல் எவரிடமும் துணிவுடன் கூறுபவர்.
சிறிதுகாலமாக உடல் நலம் குன்றியிருந்தார். குன்றாக் கொள்கை வாழ்வு வாழ்ந்தவர்.
அவரது மறைவால் திராவிட இயக்கம் ஒரு நல்ல கொள்கைப் போர்த் தளபதியை இழந்துள்ளது. அவரது மறைவால் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ள அவரது வாழ்விணையர் திருமதி கமலா அம்மையார், மகன்கள் பொறியாளர் எல்.ஜி. அண்ணா, மருத்துவர் எல்.ஜி. கோவிந்தநாதன், மகள் மருத்துவர் எல்.ஜி.மாதவி ஆகியோருக்கும், உற்றார், உறவினருக்கும் கழகத்தினருக்கும் ஆறுதலையும், மறைந்த மாவீரர் அவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
முகாம்: மும்பை தலைவர்,
4.1.2026 திராவிடர் கழகம்
குறிப்பு: எல்.கணேசன் அவர்களின் மூத்த மகன் பொறியாளர் எல்.ஜி.அண்ணாவிடம் கழகத் தலைவர் அவர்கள் மும்பையிலிருந்து தொலைபேசியில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
