சென்னை, டிச. 31- பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வரும் நிலையில், கூட்டுறவு துறை சிறப்புத் தகவல் ஒன்றை பிறப்பித்துள்ளது.. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை அனுப்பி உள்ளது,
பொங்கல் பரிசு
தொகுப்பு டோக்கன்கள்
ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் மற்றும் டோக்கன் வினியோகம் குறித்தும் குறித்தும் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.மண்டலங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப ஜனவரி 2ஆம் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் ரேசன் அட்டை தாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும். முதல் நாள் முற்பகல் 100 ரேசன் அட்டைதாரர்களுக்கும், பிற்பகல் 100 ரேசன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவது நாட்களில் இருந்து காலையில் 200 பேர், பிற்பகலில் 200 பேர் என மொத்தம் 400 பேருக்கு பொங்கல் பரிசு தொகை விநியோகம் செய்திட வேண்டும் சட்டம் -– ஒழுங்கு பிரச்சினை எழக்கூடிய ரேசன் கடைகள், அதிக கூட்ட நெரிசல் ஏற்படக்கூடிய ரேசன் கடைகள் போன்ற கடைகளின் பட்டியல்கள் முன் கூட்டியே தயார் செய்யப்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு போதிய காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
