காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி, சிறீநகரில் பேட்டி அளித்தார். தாய்மொழியான காஷ்மீரியில் பேசியபோது அவரை உருது மற்றும் ஹிந்தி மொழியில் பேசுமாறு ஊடகவியலாளர்கள் கூறினர்.
அப்போது மெகபூபா முப்தி கூறும்போது, “காஷ்மீரி மொழிக்கு மதிப்பு அளியுங்கள். நமது மொழியைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழில் பேசுகிறார் – அவரிடம் நீங்கள் தமிழில் வேண்டாம், ஹிந்தியில் பேசுங்கள் என்று பேசக் கோருவீர்களா?” என்று கண்டித்தார்.
முழுவதும் காஷ்மீரி மொழியில் செய்தியாளர் களிடம் அவர் உரையாடினார். மெகபூபா முப்தி கூறிய தாவது: ‘‘வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இந்தியாவிலும் காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் வாழும் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் உமர் அப்துல்லா, அனைத்து மாநிலங்களுக்கும் அமைச்சர்கள் குழுவை அனுப்பி வைக்க வேண்டும். அந்த மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காஷ்மீர் மக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும்’’ என்பதோடு கேள்வி ஒன்றை முன் வைத்தார் மெகபூபா முப்தி.
‘‘ஊடகவியலாளர்களுக்கு தமிழ்நாட்டு முதல மைச்சரின் தாய்மொழிப்பற்றைப் பற்றி கேள்வி கேட்க முடியுமா?’’ என்று கேட்டார்.
வட இந்தியாவில் எந்த ஒரு ஊடகச் சந்திப்பாக இருந்தாலும் ஹிந்தியில் தான் பேசக் கூறுவார்கள்; மராட்டி, குஜராத்தி போன்ற இதர மாநில மொழிகளில் தலைவர்கள் பேசினாலும் குறுக்கிட்டு ஹிந்தியில் பேசக்கூறுவார்கள். காரணம் அங்கே உள்ளூர் மொழி ஊடகவியலாளர்கள் ஒன்று, இரண்டு பேர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் ஹிந்திவாலாக்களோ 50 க்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். ஆகையால், பேசும் தலைவர்களும் வேறு வழியின்றி ஹிந்தியிலேயே பேசுவார்கள்.
மராட்டிய மொழி பேசும் மகாராட்டிரா தலைநகர் மும்பையில் ஊடகவியலாளர் சந்திப்பில் ஹிந்தியில் பேசுவதை மராட்டியில் மொழி பெயர்த்து பேசும் அவலம் இன்றும் உள்ளது. தற்போது முதல் முறையாக காஷ்மீரில் ஹிந்தி பெரும்பான்மை வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி அரசின் கொள்கை ஒரே நாடு, ஒரே மொழி என்பதே!
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியில் தந்திரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை மாநில அரசுகள் ஏற்காவிடின் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள்.
எதையாவது காரணமாகச் சொல்லி, பிஜேபி ஆட்சி நடத்தாத மாநிலங்களைப் பொருளாதார நெருக்கடியில் தள்ளும் விஷமத்தனமான வேலையில் இறங்கி வருகின்றனர்.
ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் மனோபாவம் வட இந்திய ஊடகக்காரர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி ஒரு சரியான கேள்வியை எழுப்பியுள்ளார். ‘‘தமிழ்நாட்டில் எழுந்து நிற்கும் தாய் மொழிப் பற்றைப் பற்றி உங்களால் கேள்வி கேட்க முடியுமா? தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஹிந்தியில் பதில் சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேட்க முடியுமா?’’ என்ற ‘வினா வெடி குண்டை’த் தூக்கிப் போட்டு இருக்கிறார்!
திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி யிருக்கும் திடமான – சிந்தனை ரீதியான மண்ணின் மனப்பான்மை இந்திய துணைக் கண்டம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதைத் தான் –காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி எழுப்பியுள்ள வினாவில் நுட்பமாகவே தெரிகிறது. ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் ஒவ்வொரு செயலும் இந்திய ஒற்றுமையைத்தான் சிதைக்கும் என்பது நினைவில் இருக்கட்டும்!
