சேலம், டிச.29– தங்கத்திற்கு அடுத்த படியாக வெள்ளி கொலுசு உள்பட வெள்ளி நகைகளை வாங்கி பொது மக்கள் அதிக அளவில் அணிந்து வந்தனர். தற்போது வெள்ளியின் விலை படிப்படியாக அதிகரித்து நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
குறிப்பாக நேற்று (28.12.2025) வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 54 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு மேலும் ரூ.20 ஆயிரம் அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 2 லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை 274 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
அண்மைக்காலமாக வெள்ளி விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் தொழில் அதிபர்கள் பலர் வெள்ளியில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் வெள்ளி விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இதில் அதிகபட்சமாக நேற்று (28.12.2025) ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உயரும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் விலை உயர்வால் வெள்ளி நகைகளும் வாங்க முடியாத நிலை உள்ளதால் ஏழை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை தொடர் உயர்வால் வெள்ளி நகைகளை பொது மக்கள் வாங்குவது கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் புதிய ஆர்டர்கள் வராததால் வேலை இல்லாத நிலையில் களை இழந்து காணப்படுகிறது. மேலும் அங்கு வேலை பார்த்த பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.
