நடப்பு ஆண்டு வீரதீர விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்: “நாடாளுமன்றத்தில் ஒலித்த பிராந்திய மொழிகள், நாட்டின் மொழிப் பன்முகத்தன்மையின் வலிமைக்கு ஆதாரமாக உள்ளன. சமீபத்திய குளிர்காலக் கூட்டத் தொடரில் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் உரையாற்றினர். அவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் தமிழிலும், 40-க்கும் மேற்பட்டோர் மராத்தியிலும், 25 பேர் வங்க மொழியிலும் பேசினார்கள்” என்று குறிப்பிட்டார்.
அவரது பேச்சு நாக்கில் மட்டும்தான் இருக்கிறது; ஆனால் உள்ளமெல்லாம் ஹிந்தித் திணிப்பு வெறிதான் குடி கொண்டுள்ளது. 2014-இல் ஆட்சிக்கு வந்ததுமே, கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு அனைவருக்கும் வங்கிக் கணக்குத் தொடங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்கு ‘பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா’ எனப் பெயரிட்டு, அங்கேயே ஹிந்தித் திணிப்பைத் தொடங்கினார்.
சமீபத்தில், மகாத்மா காந்தி நூறு நாள் வேலைவாய்ப்புத் (MGNREGA) திட்டத்தின் பெயரை மாற்றி, ‘ராம்’ (RAM) என்ற சொல் வரும் வகையில், “விகசித் பாரத் கேரண்டி பார் ரோஜ்கார் அண்ட் அஜீவிகா மிஷன் கிராமின்” (VB-RAM-G) எனப் பெயர் சூட்டியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், ‘ரோஜ்கார்’ என்றாலும் வேலைதான், ‘அஜீவிகா’ என்றாலும் வாழ்வாதாரம்/வேலைதான். ஒரே பொருளைக் கொண்ட இரண்டு ஹிந்திச் சொற்களைப் பெயரில் திணிப்பதன் நோக்கம் ஹிந்தி மொழி வெறி அன்றி வேறென்ன?
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒன்றிய அரசு நிகழ்ச்சிகளில் அதிகமாக ஹிந்திப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டது இல்லை. ஆனால், சமீபகாலமாக ஒன்றிய அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அமைச்சர்களின் பெயர்ப்பலகைகள் கூட ஹிந்தியிலேயே வைக்கப்படுகின்றன. மக்களுக்கு ஹிந்தி தெரியாது என்று தெரிந்தும், கட்டாயமாக ஹிந்தியைத் திணித்து வருகிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையில் ‘மும்மொழித் திட்டம்’ என்ற பெயரில், ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியைக் கட்டாயமாகத் திணிக்க முயல்கிறார்கள். சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்துக் கல்லூரிகளிலும் ஹிந்தியை ஒரு பாடமாக்க வேண்டும் என முடிவெடுத்து, அதற்கான சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். நிலைக்குழுவிலும் பாஜகவினரே பெரும்பான்மையாக உள்ளனர்.
இப்படி எங்கு பார்த்தாலும் ஹிந்தித் திணிப்பை வலியுறுத்திவிட்டு, மேடையில் மட்டும் “மொழிப் பன்முகத்தன்மை இந்தியாவின் வலிமை” என்று முழங்குகிறார் மோடி. இதைக் கேட்கும்போது, “உலக மகா நடிப்புடா சாமி!” என்ற திரைப்பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
1930ஆம் ஆண்டு முதல் ‘ஆகாஷ்வாணி’ என்று அழைக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாட்டில் எழுந்த போராட்டத்தால் ஆகாஷ்வாணி என்ற பெயர் நீக்கப்பட்டு ‘அகில இந்திய வானொலி’ என்று மாற்றப்பட்டது. இப்பொழுது மீண்டும் ஆகாஷ்வாணி என்று ஒலிக்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் ஹிந்தி – சமஸ்கிருதப் பெயர்களே சூட்டப்படுகின்றன.
எடுத்துக்காட்டுக்கு இதோ:
ஜன் தன் யோஜனா (Jan Dhan Yojana) 2014
முத்ரா யோஜனா (MUDRA Yojana)
ஸ்வச் பாரத் அபியான் (Swachh Bharat Abhiyan)
ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat)
நமாமி கங்கே (Namami Gange)
பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் (Beti Bachao Beti Padhao)
கவுஷல் விகாஸ் யோஜனா (Kaushal Vikas Yojana)
சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan)
கிசான் சம்மான் நிதி (PM-KISAN)
பசல் பீமா யோஜனா (Fasal Bima Yojana)
உஜ்வலா யோஜனா (Ujjwala Yojana)
கிராம் ஜோதி யோஜனா (Gram Jyoti Yojana)
கதி சக்தி (Gati Shakti)
அம்ருத் (AMRUT) சாகர்மாலா (Sagarmala)
ஆத்மநிர்பர் பாரத் (Atmanirbhar Bharat)
அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana)
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Yojana)
பிரதான் மந்திரி மத்ரித்வ வந்தனா யோஜனா (Pradhan Mantri Matritva Vandana Yojana)
தீன் தயாள் உபாத்யாய கிராம் ஜ்யோதி யோஜனா (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana)
பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாயி யோஜனா (Pradhan Mantri Krishi Sinchai Yojana)
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana)
விக்சித் பாரத் (Viksit Bharat)
பாலகல்யான் யோஜனா,
விக்ஷித்பாரத் ஊச்சா சிக்ஷா சுதார் யோஜனா,
பிரதான்மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்கார் Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana
ஜனகல்யான் யோஜனா,
அஜீவிகா உஜவல் யோஜனா,
கதிசக்தியோஜனா
நமோபாரத்
அம்ருத்பாரத்
அஜீவிகா தீதி யோஜனா
விக்ஷித் பாரத் ரோஜ்கார் கியரண்டி அண்ட் அஜீவிகா கிராமின் யோஜனா(2025)
இவை ஒன்றிய அரசின் முக்கிய திட்டங்கள் ஆகும். 2024 முதல் பல நூறு திட்டங்களுக்கு வாயில் நுழையாத பெயர்களையே வைத்துள்ளார்கள்.
ஒரே நாடு, ஒரே மொழி என்று வாயளவில் மட்டுமல்லாமல் செயலளவிலும் காட்ட ஆரம்பித்து வி்ட்டனர். வெகு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை! தேவை!!
