புதுச்சேரி, டிச. 22- தேர்தல் சர்வே என்ற பெயரில் அரசியல் கட்சிகள் புதுச்சேரி மக்களைக் கடந்த சில நாட்களாகப் அலைக்கழித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையத் தரவுகளிலிருந்து வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்கள் சில கும்பலால் திருடப்பட்டுள்ளதாகத் திகில் கிளப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான சிவா.
வாக்காளர் தகவல் திருட்டு
இது தொடர்பாகப் புதுச்சேரியில் நேற்று (21.12.2025) செய்தியாளர் களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் சில கும்பலால் திருடப்பட்டுள்ளன. இது வெறும் தகவல் திருட்டு மட்டுமல்ல; பாஜக ஆதரவுடன் நடந்திருக்கும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்ப்பதற்கான சதியாகும். தேர்தல் ஆணையத்தின் மெத்தனத்தால் வாக்காளர்களின் ரகசியத் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல், புதுச்சேரி முழுவதும் 797131 9706 என்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொலைபேசி எண்ணிலிருந்து வாக்காளர்களுக்கு அழைப்புகள் வருகின்றன. அதில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பெயரைக் குறிப்பிட்டு, ‘ஒன்றை அழுத்து’, ‘இரண்டை அழுத்து’ எனப் போலியான ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினார்கள். அடுத்ததாக இதே பாணியில் முதலமைச்சர் ரங்கசாமி பெயரிலும் சர்வே நடத்தினார்கள்.
இந்த சர்வே தொடர்பான அழைப்புகளில் வாக்காளர்களின் தொகுதி விவரங்கள் துல்லியமாகக் குறிப்பிடப்படுவதால், தேர்தல் ஆணையத் தரவுகளிலிருந்தே இந்தத் தகவல்கள் திருடப்பட்டிருப்பது உறுதியாகிறது. இந்தச் சர்வே தொல்லைகள் தொடர்பாக திமுக-வும் இன்னும் சிலரும் சிறப்புக் குற்றப் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. தேர்தல் ஆணையமும் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால், இந்தத் தகவல் திருட்டை ஆரம்பத்திலேயே தடுக்க முடியாமல் போய்விட்டது.
அரசியல் கட்சிகளுக்கே வழங்கப்படாத தனிநபர் தகவல்கள், தனியார் மார்க்கெட்டிங் ஏஜென்சி மற்றும் கொள்ளைக் கும்பலிடம் போய்ச் சேர்ந்தது எப்படி? இதை எல்லாம் நடத்துவது துணைநிலை ஆளுநர் அலுவலகமா? அல்லது ஆளும் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியின் பின்புற அரசியல் தந்திரமா? எனக் கேள்வி எழுகிறது. தரவுத் திருட்டின் பின்னணியில் பாஜக இருப்பதால் தான் காவல்துறையும் தேர்தல் ஆணையமும் அமைதியாக இருக்கின்றன போலும்.
போராட்டம்
பீகார் தேர்தல் சமயத்தில் அந்த மாநிலப் பெண்களுக்கு வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் ரூபாயை வரவு வைத்தது போல், புதுச்சேரியிலும் திருடப்பட்ட தனிநபர் தகவல்களை வைத்து அரசியல் செய்யத் தயாராவது இதன் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. இது சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். தேர்தல் ஆணையமும், சிறப்புக் குற்றப் பிரிவு காவல் துறையினரும் இந்த விசயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்க்கட்சிகளைத் திரட்டிப் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.
