ஒற்றைப் பத்தி

Viduthalai
1 Min Read

 பயிர்ப்பு?

கேள்வி: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நால் வகைக் குணங்களில் ஒன்றேனும் இன்றைய பெண்களிடம் உள்ளதா?

பதில்: இன்றைய பெண்ணுரிமைவாதிகள் யாரிடமும் இல்லாத குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. அவர்களின் செல்வாக்கில் சிக்கும் பெண்களுக்கும் இந்தக் குணங்கள் இருக்காது. அவர்களிடம் மாட்டாத பெண்களிடம் இந்தக் குணங்கள் இருக்கவே செய்யும்.

‘துக்ளக்’, 19.4.2023, 

பக்கம் 31

பெண்ணியவாதிகள் என்றால் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் – அவர்களிடம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புகள் கிடையாது என்கிறார் திருவாளர் குருமூர்த்தி.

இதில் பயிர்ப்பு என்ற ஒன்று கூறப்படுகிறதே –  இதன் பொருள் என்ன? மதுரைத் தமிழ்ப் பேரகராதிகளைப் புரட்டிப் பார்க்கட்டும்.

பயிர்ப்பு என்றால், அதன் பொருள் அருவருப்பு என்பது தெரியுமா இந்தத் திரிநூலார்க்கு?

அருவருப்பாக இருப்பதுதான் பெண்களின் அணிகலனா?

பெண் என்றாலே ஹிந்து மதத்தில் அவ்வளவு இளக்காரம் – வெறுப்பு அப்படித்தானே!

மாதர்கள் பெரும்பாலும் விபசார தோஷமுள்ளவர்களென்று அனேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 19).

என்ன குருமூர்த்தியாரே, அக்கிரகாரப் பெண்களை இப்படி இழிவுப்படுத்தினாலும் கண்டிக்கக் கூடியவர்கள்தான் நாங்கள்.

இதே குருமூர்த்தி இக்காலப் பெண்களில் 30  சதவிகிதம் பேர் மட்டும்தான் பெண்மை உள்ளவர்கள் என்று ‘சர்வே’ எடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டது மறந்து போயிற்றா? நல்லதுக்கு ஒரு சூடு… இதுகளுக்கு…?

குருமூர்த்தியின் குருநாதர் இவரையும் தாண்டியவர்தான் எடுத்துக்காட்டுக்கு ஒன்று.

கேள்வி: பெண்களைப்பற்றி உங்களுக்கு உண்மையான அபிப்ராயம்தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள் அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள்.

 (‘துக்ளக்’, 18.3.2009).

இந்தக் கூட்டத்தைப் பெண்கள் என்ன செய்ய உத்தேசம்?

–  மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *