சென்னை, டிச.19 பங்குச் சந்தை மசோதா மக்களவையில் நேற்று (18.12.2025) அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி வைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
பங்கு சந்தை மசோதா
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (18.12.2025) மக்களவை யில் பங்குச் சந்தை மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போது திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த மணீஷ் திவாரி ஆகியோர் மசோதாவை அறிமுக நிலையிலேயே கடுமையாக எதிர்த்தனர். இந்த மசோதா தனி ஓர் அமைப்புக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குவதாகவும், இது அதிகாரப் பரவல் கொள்கைக்கு எதிரானது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், பங்குச் சந்தை மசோதா குறித்து மேலும் விவாதிப்பதற்காக அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கான விவரங்களை அந்த குழுவில் விவா திக்கலாம் என்றும் நிதியமைச்சர் தெரி வித்தார்.
அவை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி, “மசோதாக்களை நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கு உண்டு. இது குறித்து அவர் முடிவெடுப்பார்” என்றார்.
பங்குச் சந்தை மசோதா 2025 என்பது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியச் சட்டம் 1992 (SEBI Act), டெபாசிட்டரிச் சட்டம் 1996, பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 1956 ஆகியவற்றை ஒருங்கிணைந்த சட்டமாக மாற்ற முயல்கிறது. இது முதலீட்டாளர் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நாட்டின் நிதிச் சந்தைகளில் வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
