சென்னை, டிச.17- எஸ்.அய்.ஆர் என்பது ஜனநாயக மோசடி. 85 லட்சம் பேரை நீக்கிவிட்டு, 65 லட்சம் பேரைப் புதிதாக இணைக்கும் மோசடி வேலை நடக்கிறது.” சட்டப் பேரவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஜாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சமத்துவ நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (16.12.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, நடைப்பயணத்தைத் தொடங்கி வைப்பதற்கான அழைப்பிதழை வழங்கினார்.
பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போதைப்பொருள் மற்றும் கஞ்சா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.சமூக நல்லிணக்கம்: தமிழ்நாட்டில் ஜாதி, மத மோதல்களுக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தியும், சமத்துவ நடைப் பயணத்தை வரும் ஜன.2ஆம் தேதி மேற்கொள்ள உள்ளேன்.
இந்த நடைபயணத்தில் 950 பேர் பங்கேற்கின்றனர். இதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள். திருச்சி உழவர் சந்தையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் கே.எம்.காதர் மொகிதீன், கு.செல்வப்பெருந்தகை, தொல்.திருமாவளவன், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
பின்னர் விராலிமலை மற்றும் மேலூரில் நடைபெறும் மாநாடுகளில் தோழமைக் கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.
ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கின்றனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும். புதிதாக அரசியல் பிரவேசம் செய்தவர்களோ அல்லது ஏற்கெனவே எதிர்ப்பவர்களோ திமுக-வை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும்; இப்போது அதற்கான தேவையில்லை. எஸ்.அய்.ஆர். என்பது ஜனநாயக மோசடி. 85 லட்சம் பேரை நீக்கிவிட்டு 65 லட்சம் பேரைப் புதிதாக இணைக்கும் வேலை நடக்கிறது. என்ன முயற்சி செய்தாலும் அவர்களால் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது.
