சென்னை, டிச. 17- நேஷனல் ஹெரால்டு வழக்குத் தீர்ப்பின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்குவதற்காக ஒன்றிய பாஜக அரசினால் ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப் படுவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தி யுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.
சோனியா, ராகுல்காந்தி மீது குற்றப்பத்திரிகை
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடருமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “நேஷனல் ஹெரால்டு வழக்குத் தீர்ப்பின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்குவதற்காக ஒன்றிய பாஜக அரசினால் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தியுள்ளது.
சட்டரீதியான எந்தவொரு முகாந்திரமும் இன்றி, இத்தகைய வழக்குகள் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்தவும் களங்கப்படுத்தவுமே தொடரப்படுகின்றன.
உண்மையையும் அச்சமின்மையையும் தங்கள் பக்கம் கொண்டுள்ள நாடாளுமன்றக் காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க் கட்சித் தலைவரும், எனது சகோதரருமான ராகுல் காந்தி தவறிழைக்காதது நிரூபணமாகியுள்ளது.
ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பின் மாண்புநெறிகளில் அவர்கள் உறுதியாக நிற்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக காந்தி குடும்பத்தினரைத் தொடர்ந்து வேட்டையாடுவதில் குறியாக உள்ளது.
பாஜகவின் இந்தப் பழிவாங்கும் நோக்கம் நாட்டின் உயர் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீண்டும் மீண்டும் சிதைத்து, அவற்றை வெறுமனே அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான கருவிகளாகச் சுருக்குகின்றது.” இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
