மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்
சென்னை, டிச.15 காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவது மக்களின் சேமிப்புகளுக்கு ஆபத்து என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய காப்பீட்டுத் துறையை பன்னாட்டு மூலதனத்துக்கு முழுமையாக திறந்துவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்டகால நிர்பந்தம். அதற்கு அடிபணியும் வகையில் காப்பீட்டுத் துறை தனியார் நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்தும் அமைச்சரவை முடிவு கண்டனத்துக்குரியது.
1990-களில் சுதேசி பேசி,இன்று தேசியம் என்று எதற்கெடுத்தாலும் முழங்குபவர்கள் அந்நிய முதலீட்டுக்கு காட்டியுள்ள தாராளம் வெட்கக்கேடானது. ஆயுள் காப்பீடு என்பது நீண்டகால முதலீடு. இதில் உள்ளே வந்த அந்நிய காப்பீட்டு நிறுவனங்கள் பல தற்போது திவாலாகிவிட்ட நிலையில், அரசு நிறுவனமான எல்அய்சியின் பாலிசிதாரர் உரிமப் பட்டுவாடா சதவீதம் 99 இருப்பது அதன் சேவைக்கு சான்றாகும்.
இதை சீர்குலைக்க செய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. 100 சதவீத அனுமதி தந்தால் உள்நாட்டு சேமிப்புகளும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் காப்பீடும் சமூக பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். எனவே காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
23ஆம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு
சென்னை, டிச.15 தமிழ்நாட்டில் தற்போது கிழக்கு திசை காற்றின் காரணமாக குளிர் வாட்டிவ ருகிறது. 23ஆம் தேதிக்கு பிறகு இந்த காற்று விலகும் என்பதால், மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது வெப்பநிலை குறைந்துள்ளதால் குளிர் அதிகரித்துள்ளது. நீண்டகாலத்துக்கு பிறகு வட தமிழ்நாட்டில் குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரிக்கும் கீழ் குறைந்துள்ளதால் குளிரின் தாக்கம் இருக்கிறது.
குறிப்பாக உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் 10 டிகிரிக்கும் கீழே வெப்பநிலை சென்றுவிட்டதால் அங்கு உறைபனி நிலவுகிறது. மேலும் ஓசூர், தேன்கனிக்கோட்டை,சூளகிரி, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட வெப்பம் அதிகமாக காணப்படும் பகுதிகளிலும் கூட தற்போது 17 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுவிட்டதால் அங்கும் கடும் குளிர் வாட்டுகிறது.
சென்னை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை பொருத்தவரையில் கும்முடிப்பூண்டி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 21 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுவிட்டது. அதனால் இங்கும் இரவில் கடும் குளிர் மற்றும் காலையில் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு 21 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றுள்ளது.
வடக்கு திசையில் இருந்து தென்பகுதியை நோக்கி குளிர் காற்று வீசுவதன் காரணமாகவும், கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவதாலும் 23ஆம் தேதி வரை கடும் குளிர் நிலவும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில்பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. 23ஆம் தேதிக்கு பிறகு மேற்கண்ட குளிர் காற்று விலகும் என்றும் எதிர்பார்்க்கப்படுவதால் வடக்கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
