தஞ்சை, டிச.15 தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் நேற்று (14.12.2025) அளித்த பேட்டி: இந்திய அளவில் தமிழ்நாடு தனிமனித வருமான வளர்ச்சியில் 16.5 சதவீதம் என்ற இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் தான் இது நிகழ்ந்துள்ளது. இதுவே இந்த ஆட்சியின் நான்கரை ஆண்டு சாதனையாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வகைகளில் மக்களின் தேவையை உணர்ந்து செயல்பட்டு வருகிறார்.
‘ஆட்டுக்கு தாடி தேவையில்லை. அதே போன்று தமிழ்நாட்டுக்கு ஆளுநர் தேவை இல்லை’ என்று அறிஞர் அண்ணா கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக ஆளுநர் செயல்பட வேண்டும். மாநில அரசின் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் கொண்டு சேர்த்து பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது இருக்கக்கூடிய ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்பட்டு வருகிறார். இதன் எதிரொலியாகவே நமது அரசு கொண்டு வரும் தீர்மானங்களையும், கோரிக்கைகளையும் புறக்கணித்து வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்யாத ஆளுநர் ரவி தேவையில்லை என்றார்.
