நாடு முழுவதும் எஸ்.அய்.ஆர். பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகளில் உத்தரப்பிரதேசத்தில் வாழும் சாமியார்கள் தங்களின் விருப்பம் போல் சாமிகளின் பெயரை பெற்றோர் இடத்தில் எழுதிக் கொடுத்துள்ளனர்.
சீதை, ஜானகி, பார்வதி, கவுசல்யா, கங்காதேவி போன்ற பெயர்களை ‘தாயார் பெயர்’ உள்ள இடத்தில் குறிப்பிடுகின்றனர்.
இதைத் தொடங்கி வைத்தது மேனாள் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர்; தற்போது அயோத்தியா சாமியார் மடத்தின் தலைவரும் அவரே!
‘‘நான் தான் இப்படி எழுதி இதர சாமியார்களையும் எழுதிக் கொடுக்கக் கூறினேன்’’ என்று ஒப்புதல் வாக்குமூலம் வேறு கொடுத்துள்ளார்.
ஆவணங்கள் இல்லாமல் விருப்பப்படி பெயர் சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் எந்த விதிமுறையின் கீழ் அனுமதிக்கிறது?
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க (Special Summary Revision – SSR/எஸ்அய்ஆர்), விண்ணப்பப் படிவத்தில் தாய் மற்றும் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது அவசியமாகும்.
‘இதற்கான ஆதாரங்கள் அளிக்கத் தேவையில்லை’ என்ற தளர்வு இருப்பதால், துறவிகள் தங்கள் விருப்பப்படி கடவுளரின் பெயர்களையோ அல்லது குருவின் பெயர்களையோ குறிப்பிடுகின்றனர்.
பிறப்பு, வசிப்பிடம், வயது போன்ற அடிப்படை விவரங்களுக்கு ஆதாரங்கள் (ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் போன்றவை) கேட்கப்படும்போது, ஒருவரின் சட்டப்பூர்வமான அடையாளம் மற்றும் குடும்பப் பின்னணியைக் குறிக்கும் தாய், தந்தை பெயர்களுக்கு எந்தச் சான்றும் தேவையில்லை என்ற தளர்வு, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கும் மற்றும் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமையாதா?
துறவிகள் தங்கள் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் தாய் மற்றும் தந்தையாகக் கடவுளரையும் (சீதை, ஜானகி, கவுசல்யா) மற்றும் தீட்சை அளித்த குருவையும் குறிப்பிடுகின்றனர்.
சட்டப்படி, ஒருவரின் தந்தை மற்றும் தாய் என்பவர்கள் உயிரியல் ரீதியான அல்லது சட்டப்பூர்வமாகத் தத்தெடுத்த பெற்றோர்களைக் குறிக்கிறது.
துறவிகள் தங்களுக்குப் பெற்றோரின் பெயர்கள் தெரியாத நிலையில், ஆன்மிக உறவுகளைப் பெற்றோரின் இடத்தில் வைத்துக் குறிப்பிடுவது சமூக நடைமுறையாக இருக்கலாம்.
ஆனால், அரசு ஆவணங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்கள் சட்டப்பூர்வமான ஆவணங்கள் என்பதால், தனிப்பட்ட ஆன்மிக நம்பிக்கைகளை உள்ளிடுவது ஆவணங்களின் சட்டப்பூர்வத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் சுத்தி கரித்து நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். ஏற்ெகனவே வாரணாசியில் ஒரே தந்தை பெயரில் 74 பேர் இருந்த விவகாரம், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை எடுத்துக்காட்டவில்லையா?
தேர்தல் ஆணையம், அரசமைப்புச் சட்டத்தின்படி நடுநிலைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் செயல்பட வேண்டும். ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் சட்டப்பூர்வ ஆவணங்களை நிரப்புவது, முறையற்ற அல்லது போலியான வாக்காளர்கள் உருவாக வழிவகுக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
இந்த விவகாரத்தில், அடையாளச் சான்றுகளைக் கோருவது, விண்ணப்பதாரர்களுக்கு தாக்கீது அளித்து விளக்கம் கேட்பது அல்லது குறிப்பிட்ட துறவிகளின் விடயத்தில் சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிடுவது ஆகியவை அவசியமாகிறது. இல்லையேல், ‘இது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’ என்று எதிர்காலத்தில் சவால் விடப்பட வாய்ப்புள்ளது.
பொது ஆவணத்தில் நம்பகமான, சட்டப்பூர்வமாக நிரூபிக்கக்கூடிய தகவல்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆன்மிக நம்பிக்கைக்காக சட்ட விதிகளைத் தளர்த்துவது, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு முரணாக அமையும் வாய்ப்புள்ளது.
ஒரு சாமியார் ஆட்சி உத்தரப்பிரதேசத்தில் நடப்பதாலேயே சாமியார்கள் ராஜ்ஜியத்தில் ‘நாங்கள் எப்படியும் நடப்ேபாம்! சட்டமாவது – கிட்டமாவது – அதெல்லாம் கால் தூசு’ என்று செயல்பட்டால், நாடு சுடுகாடாகும்.
பிஜேபி ஆட்சியின் தராதரத்தை மக்கள் உணரட்டும்!
