அரூர், டிச. 15– “தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் என்று அமித் ஷா முழங்குகிறார். அவர் எப்படி அதனைச் சொல்கிறார் என்று யோசிக்க வேண்டும். அதனை பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முடியாது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே மேனாள் அமைச்சர் பி.பழனியப்பன் இல்லத்திருமண விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (14.12.2025) நடைபெற்றது.
வாக்குத் திருட்டு
இவ்விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது கூறியதாவது: “தருமபுரி பகுதியில் திமுக கூட்டணி எந்தளவுக்கு வலுவாக உள்ளது என்பதற்கு நாடாளுமன்ற தேர்தல் வெற்றியே சாட்சி. மீண்டும் அந்த வெற்றியை உறுதி செய்யவேண்டும்.அதே போல் தமிழ் மண்ணையும் மக்களையும் பாதுகாக்க வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆனால் இதனை தடுக்க சிலர் சதி செய்கின்றனர்.
அமித்ஷா ஏற்கனவே பீகாரில் சொல்லியது போல் வெற்றி பெற்றனர். கேரளாவில் மாநகராட்சியை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அக்கட்சிக்கு வாக்குச்சாவடி முகவர் இல்லை, கட்சி கட்டமைப்பு இல்லை. ஆனாலும் முழங்குகிறார். பீகார் போல் வாக்கு திருட்டு முறையில் தமிழ்நாட்டிலும் வெற்றி பெற நினைக்கிறார். திமுக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கட்டமைப்பு வைத்துள்ளது. இந்தியாவில் எந்த கட்சிக்கும் இந்த கட்டமைப்பில்லை. கடந்த தேர்தலில் முதலமைச்சர் அவர்களின் சதிகளை முறியடித்தார். இந்த தேர்தலிலும் ஒற்றுமையாக செயல்பட்டு நாம் முறியடிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே கல்லை வைத்து, நீதித்துறையை வளைத்து, காவல் துறை, அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு வரவழைத்துள்ளனர். இதற்கெல்லாம் அச்சப் படாமல், துணிச்சலாக முதலமைச்சர் உள்ளார்.
தமிழ்நாட்டை காக்க அதிகார கும்பலை தடுக்க கூட்டணிக் கட்சியினர் ஒருங்கிணைந்து களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
