சென்னை, டிச.15- சென்னை மெரினாவில் ரூ.1 கோடி மதிப்பிலான மெட்ரோ கட்டுமானப் பொருட்களை திருடிய வழக்கில், சரக்கு வாகனம் ஓட்டுநர், கிளீனர் உட்பட வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப் பட்டனர்.
கட்டுமான பொருள்கள் திருட்டு
மெரினா கலங்கரை விளக்கத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மெட்ரோ பணிக்குத் தேவையான சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கட்டுமானப் பொருட்களை, அதன் பொறுப்பாளர்கள் சரக்கு வாகனம் ஓட்டுநர் மற்றும் கிளீனரிடம் ஒப்படைத்தனர். பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்ல அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் சரக்கு வாகனத்தில் கொண்டு சென்ற பொருட்கள் பனகல் பார்க் பகுதிக்குக் கொண்டு செல்லப்படவில்லை.
அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சரக்கு வாகனத்தைத் தேடியபோது, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகே சரக்கு வாகனம் மட்டும் தனியாக நிறுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதிலிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான மெட்ரோ கட்டுமானப் பொருட்கள் இல்லை. யாரோ திருடிவிட்டு, சரக்கு வாகனத்தை மட்டும் அங்கு விட்டுச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மெட்ரோ அதிகாரிகள் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், மெட்ரோ கட்டுமானப் பொருட்களை திருடிச் சென்றது அந்த சரக்கு வாகனம் ஓட்டுநர், பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரைச் சேர்ந்த அஜய் மஸி (32), சரக்கு வாகனத்தின் கிளீனரான உத்தரப் பிரதேச மாநிலம், ஆசம்கரைச் சேர்ந்த ஆதித்யா ராய் (19) மற்றும் அவர்களது கூட்டாளியான, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு சரக்கு வாகனம் ஓட்டுநர் கோவிந்த் பஸ்வான் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், மூன்று பேரும் சம்பந்தப்பட்ட மெட்ரோ கட்டுமானப் பொருட்களைத் திருடிச் சென்று மதுரவாயல் பைபாஸ் மேம்பாலம் அருகே இறக்கி வைத்துவிட்டு, சரக்கு வாகனத்தை கோடம்பாக்கம் பகுதியில் விட்டுச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
