அர்ஜுனன்: ஏ கிருஷ்ணா! சுயராஜ்யக் கட்சி காங்கிரசில் சேராமல் தனித்திருந்த போது அதற்குக் கொஞ்சம் மரியாதை இருந்தாப் போல் தெரிந்ததே. இப்பொழுது காங்கிரசில் சேர்ந்து சுயராஜ்யக் கட்சியே காங்கிரசாக மாறி மகாத்மா காந்தியும் ஆசீர்வாதம் பண்ணியும் அவர் சிஷ்யர்களும் எவ்வளவோ அதற்கு வெளிப் படையாயும், இரகசியமாயும் உதவி செய்தும் இப்படி துள்ளத் துள்ள செத்துப் போய் விட்டதே அதன் காரணம் என்ன?
கிருஷ்ணன்: ஓ அர்ஜுனா! இது உனக்குத் தெரிய வில்லையா? கலியுக பத்மாசூரன் கை வைத்தால் எது தான் வாழும்?
அர்ஜுனன்: அது யார்? எனக்குத் தெரிய வில்லையே.
கிருஷ்ணன்: உண்மையாய் தெரியாதா?
அர்ஜுனன்: ஆம், தெரியாது.
கிருஷ்ணன்: அதுதான் நமது ஸ்ரீமான் எஸ்.சீனி வாசய்யங்கார்.
அர்ஜுனன்: ஓ ஹோ! அவர் தலைவரானதினால்தான் போய்விட்டதோ? சரி, சரி, அதனால் தான் நமது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிகூட செத்துப் போய்விட்டது இப்பொழுது எனக்குப் புரிந்தது. கொஞ்ச காலத்திற்கு முன்கூட ஒரு நண்பர் எனக்குச் சொல்லியிருக்கிறார். அதாவது, “நம் தலைவர் (?) ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் தொட்டது துலங்காது, எதில் போய் அவர் கையை வைத்தாலும் பத்மாசூரன் கை வைத்தது போலவேதான் முடியும், கடைசி காலத்திற்குத்தான் எந்த இயக்கமும் அவரிடம் போய்ச் சேரும்” என்று சொன்னார். அது சரியாய்ப் போய்விட்டது.
கிருஷ்ணன்: இப்போது உனக்குப் புரிந்ததா?
அர்ஜுனன்: புரிந்தது, ஆனால் இன்னும் ஒரு சந்தேகம்.
கிருஷ்ணன் : என்ன சொல்லு?
அர்ஜுனன்: இது இரண்டும் ஒழிந்து போனது நல்ல காரியந்தான். சிலர் காங்கிரஸ், காங்கிரஸ் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதென்ன?
கிருஷ்ணன்: காங்கிரசுக்கு காலம் கிட்டிக் கொண்டது. இப்பொழுது தொண்டையில் உயிர் இருக்கிறது. இந்த வருஷம் நமது அய்யங்கார் அதற்கும் தலைவராக வரப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். நம்மை பிடித்த நல்ல வேளையாய் அதிலும் அவர் கை வைக்கும்படி ஏற்பட்டுவிட்டால் அதுவும் தீர்ந்து போகும்.
அர்ஜுனன்: இம்மூன்றும் ஒழிந்தால் நமது நாட்டைப் பிடித்த சனியன் ஒழிந்து போகுமல்லவா?
கிருஷ்ணன்: இம்மூன்றும் ஒழிந்தால் போதாது. மயில் ராவணன் தலை மாதிரி வெட்ட வெட்ட முளைத்துக் கொண்டுதான் வரும்.
அர்ஜுனன்: பின்ன இன்னமும் என்னவாக வேண்டும்?
கிருஷ்ணன்: நாட்டுக்கு நல்லகாலம் வர வேண்டுமானால், நமது நாட்டு பிராமணியம் ஒழிய வேண்டும்.
அர்ஜுனன்: அது லேசில் ஒழியாது போல் இருக்கிறதே.
கிருஷ்ணன்: அர்ஜுனன்! நீ அப்படி நினைக்க வேண்டாம். இனி நமது கலியுக பத்மாசூரரான சீனிவாசய்யங்கார் பிராமணியத்திற்கும் ஒரே தலைவராகப் போகிறார். அப்போது அதுவும் ஒழியும். அய்யங்கார் பிரளயம் இந்தக் கொடுமைகளையெல்லாம் ஒழித்த பிறகு மகாத்மா காந்தி மறுபடியும் வருவார். அப்போது உலகத்துக்கு சேமம் பிறக்கும்.
அர்ஜுனன்: அப்படியா! ரொம்பவும் சந்தோஷம்.
– குடிஅரசு – கற்பனை உரையாடல் – 18.07.1926
