சென்னை, டிச. 12- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நேற்றுடன் (11.12.2025) முடிவடைய இருந்த நிலையில், இந்த அவகாசத்தை டிச.14ஆம் தேதி வரை மேலும் 3 நாட்கள் நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்த (எஸ்அய்ஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் வழங்குவது, அதை பூர்த்தி செய்து பெறுவது, மற்றும் பதிவு செய்யும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் டிச.4ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படிவம் விநியோகம், பூர்த்தி செய்து திரும்ப பெறுவது போன்றவற்றில் சிக்கல்கள் எழுந்தது மற்றும் பருவமழை உள்ளிட்ட காரணங்களால், அவகாசத்தை நீட்டிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதை ஏற்று, எஸ்அய்ஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நேற்று (டிச.11) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. டிச.16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்.14ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எஸ்அய்ஆர் படிவம் விநியோகம், பூர்த்திசெய்து சமர்ப்பித்தல், பதிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான அவகாசத்தை மேலும் 3 நாட்கள், அதாவது டிச.14ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (11.12.2025) மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ஆம் தேதி வெளியாகும். அன்று முதல், ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். பின்னர், அதுகுறித்த பரிசீலனைகள் நடைபெறும்.
வங்கதேசத்தில்
பிப்ரவரி 12இல் பொதுத்தேர்தல்
பிப்ரவரி 12இல் பொதுத்தேர்தல்
டாக்கா, டிச. 12- வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு (2024) தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு வாக்குகளில் மோசடி செய்ததாக குற்றஞ் சாட்டி அந்நாட்டின் முக்கியக் கட்சிகள் பொதுத்தேர்தலை புறக்கணித்தன.
அந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்தப் போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக மாறியது.
நாட்டின் நிலைமை மோசமானதைத் தொடர்ந்தும், இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன்பின்னர், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டார்.
