மத்திய காவல் படையில் பணியாற்றி விரும்பும் இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்துகொண்டிருந்த அறிவிப்பை பணியாளர் தேர்வு வாரியம் (SSC) வெளியிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், எல்லை பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP), சாஸ்திர சீமா பால் (SSB), செயலக பாதுகாப்புப் படை (SSF), இந்த படைகளில் உள்ள காஸ்டபிள் (General Duty) பதவி மற்றும் அசாம் ரைபிள்ஸ் (AR) ரைபிள்மேன் ஆகிய பதவியில் உள்ள காலிப்பணியிடங்கள் எஸ்எஸ்சி மூலம் நிரப்பப்படுகிறது.
அதன்படி, 2025ஆம் ஆண்டு ஆண்கள், பெண்கள் சேர்ந்து மொத்தம் 25,487 காலிப்பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
வயது வரம்பு
01.01.2026 தேதியின்படி, கான்ஸ்டபிள் பதவிக்கு 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகப் படியாக 23 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.2003 தேதிக்கு முன்னரும், 01.01.2008 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படும்.
கல்வித்தகுதி
இப்பதவிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜனவரி 1ஆம் தேதிக்குள் கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
மத்திய ஆயுத காவலர் படையில் உள்ள காண்ஸ்டபிள் பதவிக்கு கணினி வழி தேர்வு, உடற் தகுதித் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படும். கணினி வழித் தேர்வு தமிழ் உட்பட மொத்தம் 12 மொழிகளில் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தேர்வு மய்யம் அமைக்கப்படும்.
பொது அறிவு, கணிதம், ஆங்கிலம்/ இந்தி ஆகிய பாடங்களில் 80 கேள்விகள் கொண்டு நடைபெறும். இதில் தேர்வாகும் நபர்கள் உடற்தகுதி, உடல் திறன் தேர்வு ஆகியவற்றிக்கு தகுதி செய்யப்படுவார்கள். அதில் தேர்வாகும் நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய பாதுகாப்பு படையில் காண்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் இணையம் (ஆன்லைன்) வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இதற்கான விண்ணப்பம் டிசம்பர் 31 வரை பெறப்படுகிறது. இதற்கான தேர்வு 2026 பிப்ரவரி-ஏப்ரலில் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025
