ஜாதி! மீண்டும் மீண்டும் அந்த பேரை அழுத்தி சொன்ன ரோஹித்.. ஏன் இப்படி?
2023 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. மொத்தம் 8 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல் வியே பெறாத அணி என்றால் அது இந்திய அணிதான்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 5.11.2023 அன்று நடந்தது. இதில் இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் இன்றி ஆடி வந்தனர். இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடினர்.
தென்னாப்பிரிக்கா அணியில் குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டெர் டுசென், அய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி ஆகியோர் களமிறங்கினர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றது. தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தது.
ரோஹித் சர்மா பேட்டி: 5.11.2023 அன்று போட்டிக்கு பின்பாக பேசிய ரோஹித் சர்மா ஷ்ரேயாஸ் அய்யர் பெயரை சொல்லும் போது மீண்டும் மீண்டும் அவரின் பெயரை அய்யர் என்று மட்டும் கூறி இருந்தார். பொதுவாக அவரை ஷ்ரேயாஸ் என்றுதான் அழைப்பார்கள். ரோஹித் சர்மாவும் அப்படித்தான் அழைத்து வந்தார். ஆனால் ஏனோ மீண்டும் மீண்டும் ரோஹித், அய்யர் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தினார்.
அதேபோல் பொதுவாக விராட் என்று அழைக்கும் ரோஹித் மட்டும் விராட் என்று சொல்லாமல் கோலி என்பதை மீண்டும் மீண்டும் சொன்னார். ஷ்ரேயாஸ் அய்யரை அவரின் ஜாதி பெயரில் மட்டுமே அழைத்தது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கிரிக்கெட்டில் ஆடும் வீரர்கள் ஜாதி பெயரை பயன்படுத்தக் கூடாது என்று கூறி இருந்தார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், பிசிசிஅய்-க்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார். கார்த்தி சிதம்பரம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பின்னால் இருக்கும் ஜாதிப் பெயர்களைக் கைவிடுமாறு பிசிசிஅய் அறிவுறுத்த வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இந்த நிலையில்தான் ரோஹித் சர்மா முழுக்க முழுக்க ஜாதிப் பெயரை வைத்து பேசினார். இவர் எந்தக் காரணத்திற்காக இப்படி கூறினார்.. அல்லது யாதார்த்தமாகத்தான் பேசினாரா என்ற விவாதம் ஏற்பட்டு உள்ளது.
(சமூக ஊடகத்திலிருந்து…)