ரயில்வே வாரியம் காலதாமதம் செய்வதாகக் குற்றச்சாட்டு!
சென்னை, டிச. 9–- சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியான 4ஆவது வழித்தடத்தில், பூவிருந்தவல்லி – போரூர் வரையிலான பாதையில் ரயில் மற்றும் வழித்தடத்துக்கான பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இவற்றில், கலங்கரை விளக்கம் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரையிலான 4ஆவது வழித்தடம் ஒன்றாகும். இந்தத் தடமானது, கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது.
உயர்மட்ட மெட்ரோ ரயில்
இதில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைய உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
4ஆவது வழித்தடத்தின் ஒரு பகுதியான, பூவிருந்தவல்லி – போரூர் சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் வரை உள்ள சுமார் 10 கி.மீ. தொலைவுப் பாதையில் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.
ஏனெனில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இந்தப் பாதையில் இந்த மாதத்தில் (குறிப்பிட்ட மாதம்) தொடங்க ஏற்கனவே திட்டமிடப் பட்டிருந்தது. அதன்படி, ரயில் தண்டவாளம் அமைத்து, ஓட்டுநர் இல்லாத ரயில்களின் சோதனை ஓட்டமும் நடைபெற்று வந்தது.
இந்தத் தடத்தின் ரயில் மற்றும் வழித்தடத்துக்கு பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதற்கான சோதனையை, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (RDSO) கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மேல் நடத்தியது. அப்போது, மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப் பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பிடப்பட்டது.
விரிவான சரிபார்ப்பு
மேலும், வழித்தடத்தில் ரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப் பட்டது. RDSO சோதனை நிறைவடைந்து, ரயில்வே வாரியத்திடம் ஒப்புதலுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை மெட்ரோ ரயில் மற்றும் வழித்தடங்களுக்கான பாதுகாப்புச் சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கவில்லை. இதன் காரணமாக, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதில் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சோதனை – ஆய்வு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
RDSO குழுவினர் ஆகஸ்டில் சோதனை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள ரயில்வே வாரியத்துக்குப் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு ஒப்புதல் அளித்து, பாதுகாப்புச் சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்க வேண்டும்.
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகே, பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வந்து, இந்தப் பாதையில் சோதனை ஓட்டம் உட்பட பல்வேறு சோதனைகளை நடத்தி ஆய்வு செய்வார்.
ஏதாவது திருத்தம் இருந்தால் அவர் தெரிவிப்பார். இல்லையெனில், இந்தப் பாதையில் ரயில் இயக்கலாம் என்று அறிக்கை சமர்ப்பிப்பார்.
இறுதிக்கட்டப் பணிகள்
“இச்செயல்முறைகள் முடிந்து, விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது, இந்தப் பாதையில் 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன.
ஓரிரு இடங்களில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.” “இந்தப் பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இயக்கத் தயாராக இருக்கிறோம். இதற்காக நாங்கள் ரயில்வே வாரியத்துடனும், மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்துடனும் பேசி வருகிறோம்.”
