ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்கள் மவுனமாக இருக்கும் போது, உண்மையான பிரச்சினைகள் பொதுமக்களிடம் சேராமல் போகும்; அதனால் அர்த்தமுள்ள விவாதமும் மறைந்து விடுகிறன. இது திட்டமிட்ட இருப்படிப்பு (Censorship) காரணமாக மட்டும் அல்ல, நவீன ஊடக அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதையும் தோலுரித்து காட்டுகிறது. செய்தி நிறுவனங்கள் எந்த செய்திகளை முன்னிலைப்படுத்த வேண்டும், எவை புறக்கணிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன, இந்த செய்தியின் நுழைவாயில் அவர்களின் கைகளில் இருக்கிறது. குறிப்பிட்ட தலைப்புகள் போதுமான கவனத்தைப் பெறாவிட்டால், மக்கள் அவற்றை அறியவே முடியாது அல்லது அவற்றின் அவசரத்தைக் கவனிக்க முடியாது. இதனால் அந்த பிரச்சினைகள் பொதுவாழ்க்கை விவாதத்தில் இடம் பெறாமல் போகின்றன.
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்று வரும் மிக தீவிர பிரச்சினைகளுக்கு ஊடகங்களில் இடமில்லை. கடந்த அய்ந்து நாட்களில் மட்டும் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, பத்து லட்சத்திற்கும்மேற்பட்ட பயணிகள் கடுமையான பாதிப்புக்குளாகியிருக்கின்றனர். இதில் பெரும் பகுதியானவர்கள் மோடியை ஆதரித்தவர்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்களும் இந்திய பிரஜைகள் தானே, அவர்களின் பிரச்சினை விவாதிக்கப்பட வேண்டிய பொது பிரச்சினை தானே. ஆனால் இதன் காரணங்கள் ஊடகங்களில் விவாதிக்கபப்ட வில்லை.
விமானங்களில் தனியாரை அனுமதிக்காமல் இருக்க முடியாது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் எட்டு விமான நிறுவனங்கள் இருந்தன, வணிகத்தில் தலா 5-15 சதவிகிதம் வரை அவர்கள் வசம் இருந்தது, ஆரோக்கியமான போட்டி நிலவியது. மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.3000-4000 வரை தான் கட்டணமும் இருந்தது ஆனால் இன்றைய நிலை என்ன? இந்தியாவின் ஒட்டு மொத்த வணிகத்தில் 65 சதவிகிதத்தை ஒற்றை நிறுவனத்தின் கையில் கொடுத்து விட்டோம்; Monopoly Kills Trade என்பது தான் வணிகத்தின் அடிப்படையே, ஒரு நிறுவனத்தை வளரவிட்டு அதற்கு வழிவகுத்துக் கொடுத்தால், வளர்த்த கட்சிக்கு நல்ல லாபம் தான்; ஆனால் இந்திய மக்களுக்கு? இன்றைக்கு மதுரை சென்னை என்பது சராசரியாக 6000 ரூபாய்; வார இறுதிகளில் ரூ.11000-12000 ஆயிரம் இன்னும் திருவிழா, திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம், பயணச்சீட்டின் விலையும் ஆகாயத்தில் தான் இருக்கும்.
மக்கள் வாழ்க்கையை உண்மையில் பாதிக்கும் விசயங்கள் கவனத்துக்கு வராமல் மறைக்கப்படுகின்றன, இன்றைக்கும் இண்டிகோ நிறுவனம் தனது ஊழியர்களை வஞ்சிக்க நினைக்கிறது, அவர்களுக்குத் தேவையான ஓய்வை வழங்க மறுக்கிறது. இதன் வழியே தினசரி பயணிப்பவர்களின் வாழ்க்கை உயிரை பணயம் வைக்கிறது. ஒற்றை நிறுவனத்தின் ஆதிக்கத்தில் இருப்பதால், ஒன்றிய அரசு அவர்களின் அராஜக கோரிக்கைக்கு அழுத்தங்களுக்கு செவி சாய்க்கிறது. உடனடியாக தான் போட்ட உத்தரவை திரும்பப் பெறுகிறது.
இது இந்தியாவிற்கே பெரும் பாடம், பெரும் கேடுகளை அறிவிக்கும் பாடம், எப்படி அதானி அம்பானிகளை அவர்களின் துறைகளில் MONOPOLYயாக வளர எல்லாம் செய்து கொடுத்தார்களே? அதையே தான் இப்பொழுது இண்டிகோ முதலாளியும் கேட்கிறார்.
– எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்
