சென்னை, டிச.7 பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஸநாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
