ஜாதியின் காரணமாக அனுபவித்த கொடுமைகள்?

Viduthalai
3 Min Read

அரசியல்

மாநில வாரியாக இதோ…..

மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின்போது, பேஷ்வாக்களின் தலைநகராக இருந்த புனே நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப் படவில்லை.

ஏனெனில், காலை ஒன்பது மணிக்கு முன்பும் பிற்பகல் மூன்று மணிக்குப் பிறகும் அவர்களுடைய உடல்கள் நீண்ட நிழல்களை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம். இந்த நீண்ட நிழல்கள் ஒரு பார்ப்பனனரின் மீது பட்டுவிட்டால் அவர் குளித்துத் தனது தீட்டைப் போக்கிய பிறகே உணவு அருந்தவோ, தண்ணீர் குடிக்கவோ முடியும். 

இதே போன்று மதில் சுவரால் அரண் செய்யப்பட்ட நகரங்களுக்குள், தீண்டப்படாதவர்கள் வசிக்க அனுமதிக்கப் படவில்லை. 

கன்று காலிகளும், நாய்களும் சுதந்திரமாக நகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், தீண்டப்படா தவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை.

மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் சட்டப்படி தீண்டப்படாதவர்கள், தரையில் துப்புவதற்கு அனுமதிக்கப் படவில்லை. 

ஏனெனில், அவர்கள் எச்சிலை ஓர் இந்து மிதித்தால் அவர் தீட்டுக்குள்ளாகக் கூடும். எனவே,எச்சிலத் துப்புவதற்காக தீண்டப்படாதவர் தன் கழுத்தில் ஒரு பானையைக் கட்டிச் செல்ல வேண்டுமென்ற விதி இருந்தது. 

தனது காலடித் தடத்தை அழித்துவிட ஒரு புதர்ச் செடியை இழுத்துச் செல்ல வேண்டுமென்றும் இருந்தது.

ஒரு பார்ப்பனன் வருவது தெரிந்தால் தீண்டப்படாதவன் தரையில் குப்புறப்படுத்து தனது நிழல் பார்ப்பனன் மீது விழுவதைத் தவிர்க்க வேண்டுமென்ற நிலையும் இருந்தது.

ஒருவன் தாழ்த்தப்பட்டவன் என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவன் கழுத்தைச் சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கறுப்புக் கயிறு அணிய வேண்டுமென்ற விதி மகாராட்டிராவில் நிலவி வந்தது.

 குஜராத்தில், தீண்டப்படாதவர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டும் சின்னமாக, ஒரு கொம்பை அணிய வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.

பஞ்சாபில் ஒரு தெருக் கூட்டுபவள் தெருவில் நடந்து செல்லும்போது தான் ஒரு துப்புரவுப் பணியாளன் என்பதை வெளியார் அறிந்துகொள்ள தனது அக்குளில் ஒரு துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்.

பம்பாயில், தீண்டப்படாதவர்கள் சுத்தமான துணிகளை உடுத்த அனுமதிக்கப் படவில்லை. கந்தல் துணிகளையே உடுத்த வேண்டும். தீண்டப்படாதவர்களுக்குத் துணிகள் விற்கும்போது, அந்தத் துணி களைக் கந்தலாக்கியும் அழுக்கடையச் செய்தும் விற்பதில் கடைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள்.

மலபாரில் தீண்டப்படாதவர்கள் ஒரு மாடிக்கு அதிகமான மாடிகளுடன் வீடுகள் கட்ட அனுமதிக்கப் படவில்லை.

இறந்தவர்களை எரியூட்டவும் அனுமதிக்கப் படவில்லை. குடை எடுத்துச் செல்லவும், காலணிகள் அணியவும், நகைகள் அணியவும், பசுக்களிடமிருந்து பால் கறக்கவும், நாட்டில் சர்வசாதாரணமாகப் புழங்கும் மொழியை உபயோகிக்கவும் மலபாரிலுள்ள தீண்டப் படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தென் இந்தியாவில் தீண்டப்படாதவர்கள் இடுப்பிற்கு மேலே எந்தத் துணியும் அணியக் கூடாது என்று திட்டவட்டமான விதியிருந்தது.

தீண்டப்படாத பெண்மக்களும் உடலின் மேற்பகுதியை மூட அனுமதிக்கப் படவில்லை. 

பம்பாய் மாகாணத்தில் சோனர்கள் (பொற்கொல்லர்கள்) தங்கள் வேட்டியைத் தார்பாய்ச்சி உடுத்திக் கொள்ள அனுமதிக்கப் படவில்லை. 

ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கையில் நமஸ்காரம் என்ற வார்த்தையை உபயோகிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 

மராட்டியர்களின் ஆட்சியில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் வேத மந்திரங்களை உச்சரித்தால் நாக்கை வெட்டிவிடும் தண்டனை வழக்கத்தில் இருந்ததால் சட்டத்தை மீறி வேதத்தை உச்சரித்த துணிச்சலுக்காக பேஷ்வாவின் ஆணையினால் பல சோனர்களின் நாக்குகள் வெட்டப்பட்டதாக அறிகிறோம்.

இந்தியா முழுவதும் பார்ப்பனர்களுக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விலக் களிக்கப்பட்டிருந்தது. 

அவன் ஒரு கொலை செய்திருந்தாலும் தூக்குத் தண்டனை விதிக்க முடியாது.

பேஷ்வாக்களின் ஆட்சியில் குற்றவாளிக்கு அவர்களின் ஜாதியின் அடிப் படையில் தண்டனை வழங்கப்பட்டது.

தீண்டப்படாதவர்களுக்கு எப்பொழுதும் மரண தண்டனையும், கடின உழைப்பும் தண்டனையாக அளிக்கப்பட்டு வந்தன.

பேஷ்வாக்களின் ஆட்சியில் பார்ப்பன எழுத்தர்கள் வாங்கும் பண்டங்களுக்கு சில வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு இறக்குமதி செய்யப் பட்ட தானியங்களை ஓடங்களில் கொண்டுவருவதற்கு கூலி கிடையாது.

பார்ப்பன நிலக்கிழார்களின் நிலங்களுக்கு – மற்ற வகுப்பினர்கள் செலுத்த வேண்டிய வரியைவிடக் குறைவாகவே விதிக்கப்பட்டுள்ளது.

வங்காளத்தில் நிலத்திற்கான குத்தகை அதை அனுபவிப்பவரின் ஜாதியைப் பொறுத்திருந்தது.

தீண்டப்படாதவர்கள் அதிகமான குத்தகை தொகை கொடுக்க வேண்டியிருந்தது.

எழுதியவர் – பாரதரத்னா டாக்டர் அம்பேத்கர்

(மனுவும் சூத்திரர்களும் என்ற கட்டுரையில்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *