மாவட்ட ஆட்சியரின் கருத்தால்
கூட்டத்தில் சலசலப்பு
கூட்டத்தில் சலசலப்பு
செங்கல்பட்டு, நவ. 28– அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நேற்று (27.11.2025), செங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் படிவம்
திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, ‘வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பல இடங்களில் ஒத்துழைப்பு தரவில்லை. வாக்காளர் திருத்த காலக்கெடு முடிவடைவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் படிவங்கள் பல இடங்களில் சரிவர விநியோகிக்கப்படாமல் உள்ளது.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பக்கத்து தெருவுக்கு குடி பெயர்ந்து சென்றாலும், அதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கண்டுபிடித்து படிவங்கள் வழங்காமல் இடமாற்றம் என தெரிவித்து படிவங்களை திருப்பி அனுப்புகின்றனர். வாக்காளர் பட்டியல் படிவங்களை இணையத்தில் பதிவேற்றும் பணியை கடைநிலை ஊழியர்களான கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போன்றவர்கள் மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு இணையம் தொடர்பான தகவல் தொழில்நுட்பத்தில் பதிவேற்றுவதில் சிக்கல்கள் அதிகரித்துள்ளன’ என்று குற்றம் சாட்டினர்.
18 மணி நேரம்
மேலும், ‘தாம்பரத்தில் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதால் அதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு மாநிலத்தில் மட்டுமே வாக்குரிமை உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்’ எனவும் வலியுறுத்தினர்.
அப்போது பேசிய ஆட்சியர் சினேகா, “வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அதிகப்படியான மன அழுத்தத்தில் உள்ளனர். 10 முதல் 18 மணி நேரம் வரை அவர்கள் பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சில இடங்களில் இவ்வாறு நடைபெறுகிறது. இந்தப் பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும்’ என தெரிவித்தார். ஆட்சியரின் கருத்தால், ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மின்சார ரயில்களில்
படிக்கட்டில் பயணம் செய்தால்
கடும் நடவடிக்கை!
கடும் நடவடிக்கை!
ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை!

சென்னை, நவ. 28– சென்னை புறநகர் மின்சார ரயில்களில் படிக்கட்டுகளில் தொங்குதல், சாகசப் பயணங்களில் ஈடுபடுதல் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது ரயில்வே சட்டத்தின்கீழ் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
படிக்கட்டில் பயணம்
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உட்படப் பல்வேறு வழித்தடங்களில் நாள்தோறும் சுமார் 650 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்தச் சேவைகள் மூலம் ஒரு நாளைக்கு எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். சமீபகாலமாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் ரயிலின் படிக்கட்டுகள் மற்றும் ஜன்னல் ஓரத்தில் தொங்கியபடி செல்கின்றனர்.
ஓடும் ரயிலில் தொங்கியபடி நடைமேடையில் சறுக்குவது (skating-style stunts), ரயிலில் இருந்து குதித்து சாகசம் செய்வது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன.
மேலும், இந்தச் சாகசங்களைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதற்காக கைபேசியில் காட்சிப் பதிவு செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆபத்தான பயணங்களால், தவறி விழுந்தும், ரயில் பாதையை ஒட்டியுள்ள கம்பங்களில் மோதியும் பலர் படுகாயம் அடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பும் நேரிடுகிறது.
இந்தச் செயல்கள் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல், சக பயணிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதுடன், அவர்களது கல்வி நிறுவனங்களுக்கும் அவப்பெயரையும் பெற்றோருக்கும் மிகுந்த கவலையையும் ஏற்படுத்துகிறது.
நடவடிக்கை
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. படிக்கட்டுப் பயணம், சாகசங்கள் அல்லது பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ரயில்வே சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆர்.பி.எஃப்காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, உயிருக்கு ஆபத்தான சாகசங்களைத் தவிர்த்து அனைவரும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, ரயில்வேயின் உதவி எண் ‘139’-அய்த் தொடர்புகொள்ளலாம் என்றும் சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
