புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ. 20 இலட்சம் நன்கொடை வழங்க முடிவு!

புதுவை, நவ.23 புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் 17.11.2025 அன்று  மாலை 6  மணியளவில் நடைபெற்றது.

செயலாளர் தி.இராசா கடவுள் மறுப்பு உறுதி மொழி கூறினார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் .துரை. சந்திரசேகரன் தலைமையேற்று பெரியார் உலகம் தமிழர் தலைவரின் கனவு திட்டம், அதன் தொடர்பான செய்திகளை விரிவாக எடுத்துக் கூறி உரை நிகழ்த்தினார். தோழர்கள் உற்சாகத்தோடு ரூபாய் 10 லட்சம் இலக்கினை நிறைவேற்றி தர வேண்டும் என்றும், புதுச்சேரியில் எளிதாக வசூல் செய்ய வேண்டிய உத்திகள் பற்றியும்  எடுத்துக் கூறினார். கூட்டத்திற்கு முன்னிலை வகித்த புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி, மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பாகவும், பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும் எடுத்துக் கூறினர்.

தொடர்ந்து கழகத் தோழர்கள் ஒவ்வொ ருவரும் அவருடைய கருத்துக்களைக் கூற பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 தீர்மானங்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் கனவு திட்டமான திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு புதுச்சேரி மாவட்டக் கழகத்தின் சார்பாக தலைமைக் கழகம் அறிவித்த ரூ.10 இலட்சம் இலக்கை விட கூடுதலாக ரூ.20 இலட்சம் அள விற்கு வசூல் செய்வது என்றும் , அதற்கு தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

15.12.2025 அன்று தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தை புதுச்சேரியில் மாநாடு போல நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அண்மையில் ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் உலக பன்னாட்டு அமைப்பு நடத்திய கருத்தரங்கில் புதுச்சேரியில் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்த மாநிலத் தலைவர் சிவ. வீரமணி அவர்களுக்கும், அமெரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்புரை செய்து தாயகம் திரும்பிய கழகப் பொதுச் செயலாளர் முனைவர்.துரை. சந்திரசேகரன் அவர்களுக்கும் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

எதிர் வரும் டிசம்பர் இரண்டாம் நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆம் பிறந்த நாள் அன்று புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பான ஒரு நிகழ்ச்சி நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தில் முனை வர் சிவ. இளங்கோ, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கு.இரஞ்சித் குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலை வர் நெ.நடராசன், அமைப்பாளர் பா.குமரன் , விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், நகரக் கழகப் பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், பெ.ஆதிநாராயணன் , மாணவர் கழகத் தலைவர் பி. அறிவுச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர் நிறைவாக துணைத் தலைவர் மு.குப்புசாமி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *