சென்னை, நவ.22 விமான நிலையத்தில் ரூ.1.80 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயிலிருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து விமானம் ஒன்று நேற்று முன்தினம் (20.11.2025) இரவு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த வடமாநில இளைஞர் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர் உள்ளாடைகளுக்குள் ரூ.1.80 கோடி மதிப்புள்ள 1.6 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
