இந்நாள் – அந்நாள்

தமிழ்நாட்டின் திருப்புமுனை நாள்
தந்தை பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறிய நாள் (22.11.1925)

தந்தை பெரியார் 1919-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காந்தியாரின்  ஒத்துழையாமை இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றார்; கதர் பிரச்சாரம் செய்தார்; கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் முக்கிய முகமாக தந்தை பெரியார் திகழ்தார்,

சுதந்திரப் போராட்டங்களில் தீவிரமாக கலந்து கொண்டு சிறை சென்றார். 1920-களின் தொடக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கினார். 1922-இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் மதராஸ் மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் மிகுந்திருந்தது. அரசு வேலை, கல்வி, அரசியல் பிரதிநிதித்துவத்தில் பார்ப்பனரல்லாதார்  தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள் போன்றோருக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தந்தை  பெரியார் வலியுறுத்தினார்.

1920 முதல் 1925 வரை ஆறு முறை தமிழ்நாடு காங்கிரஸ் மாநாடுகளில் இத்தீர்மானத்தை முன்மொழிந்தார்.

காஞ்சிபுரம் மாநாடு (நவம்பர் 1925)

1925 நவம்பர் 21-22 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் ஆறாவது முறையாக வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை முன்மொழிய முயன்றார்.

மாநாட்டுத் தலைவர் திரு.வி. கல்யாணசுந்தரம் எதிர்ப்பு இருப்பதை உணர்ந்து, தீர்மானத்தை முன்மொழியவே அனுமதி மறுத்தார்.

இதனால் கடுங் கோபம் கொண்ட தந்தை  பெரியார், மாநாட்டு மேடையில் எழுந்து: ‘‘காங்கிரசால் பார்ப்பனரல்லாதோருக்கு நன்மை பெற முடியாது. காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை!”   என்று கூறிவிட்டு மாநாட்டை விட்டு வெளியேறினார்.

அவருடன் முக்கிய தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் வெளியேறினர். ‘பார்ப்பனரல்லாதார் மாநாடு’ ஒன்றை தந்தை பெரியார் கூட்டி, வகுப்புவாரி உரிமைகளை வலியுறுத்தினார்.

1925-இல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத்  தொடங்கினார். தந்தை பெரியாரின் தொடர் பரப்புரைக் காரணமாக 1928-இல் ஜஸ்டிஸ் கட்சி ஆதரவுடன் இருந்த அரசு கம்யூனல் ஜி.ஓ., (அரசாணை எண் 1129) பிறப்பித்தது. இதன்படி அரசு வேலைகளில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் முஸ்லிம், தாழ்த்தப்பட்டோர் போன்றோருக்கு மக்கள்தொகை விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இது இன்றைய தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளமாக அமைந்தது. தந்தை பெரியாரின் அன்றைய போராட்டம் தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தின் பெரும் திருப்புமுனையாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *