ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி 1 : டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6-ஆம் தேதி முதல் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும் என ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளாரே?

– வெ. மகாராணி, காஞ்சிபுரம்.

பதில் 1 : ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் அவர்களே தொடங்கி வைத்து, தமிழ்நாடு முழுவதும் நீள்வது, அடித்தட்டு மக்களிடம் உள்ள உறவும், சுயமரியாதைப் பரிவும் இந்த அரசுக்கு இயல்பானவை!

அரசியல் குழப்பவாதிகளால் இடையில் ஒருசில விரும்பத்தகாத நிகழ்வுகள். உண்மை வெல்லும் – நிச்சயம்!

  • • •

கேள்வி 2 : சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில், வங்காளதேச மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துப் பன்னாட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இலங்கைக்குப் பொருந்தாதா?

– மல்லிகா, மாங்காடு.

பதில் 2 : மில்லியன் டாலர் கேள்வி இது. பதில்…. பெப்பே, பெப்பே?

  • • •

கேள்வி 3 : பீகார் தேர்தல் வெற்றிக்காக உலக வங்கி நிதி ரூ.14 ஆயிரம் கோடி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது குறித்து…?

– கி. கோவிந்தராஜ், வந்தவாசி.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 3 : விசாரணைக்கு உட்படுத்த அவரே நீதிமன்றங்களை – வீதிமன்றங்களை நாடலாமே!

  • • •

கேள்வி 4 : “எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை” என்று இயக்குநர் ராஜமவுலி கூறியிருப்பது போன்று துணிச்சலாக – வெளிப்படையாக மற்ற திரையுலகப் பிரபலங்கள் கூறத் தயங்குவது ஏன்?

– ஜெ. பாண்டுரங்கன்,வாணுவம்பேட்டை.

பதில் 4 : துணிவு – சிலருக்குத்தான் வரும். அதுவும் அச்சுறுத்தலைத் தாண்டி நிலைத்தால் நல்லது. எல்லோரும் “சத்யராஜ்”களாகி விடுவது எளிதல்லவே!

சத்தியராஜிடம் தெளிவு + சுயமரியாதை + செறிவு உள்ளதே காரணம்.

  • • •

கேள்வி 5 : ‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிக்கு விடிவு தருமா?

– எஸ்.பத்ரா, படப்பை.

பதில் 5 : முழு நம்பிக்கை வரவில்லை நமக்கு!

  • • •

கேள்வி 6 : எஸ்.அய்.ஆர். பணிகளால் மன உளைச்சல் அதிகரித்திருப்பதாகக் கூறி கும்பகோணத்தில், அங்கன்வாடிப் பெண் ஊழியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பணிச் சுமை என்ற அரசு ஊழியர்களின் குமுறல்களுக்கு என்னதான் தீர்வு?

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– இரா. சித்ரா, சின்ன சேலம்.

பதில் 6 : ‘நீட்’  தேர்வுக்காக நீடித்து வரும் தற்கொலைப் பட்டியலுக்கு என்ன தீர்வோ, அதேதான் போலும் இதற்கும்!

  • • •

கேள்வி 7 :  கோவை மற்றும் மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்ட அனுமதியை மறுத்துள்ள ஒன்றிய அரசின் வஞ்சிக்கும் போக்கு, தொடர் கதையா?

– அ. சுமதி, கோவை.

பதில் 7 : பா,ஜ.க – மோடி – ஆர்.எஸ்.எஸ்.ஆல் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பட்டியலோடு சூறாவளியென தமிழ்நாட்டின் மூலைமுடுக் கெல்லாம் பிரச்சாரம் செய்தாக வேண்டும்!

பலன் நிச்சயம்! அப் பட்டியல் நீளம், நாளும் பெருகியே வருகிறது!

  • • •

கேள்வி 8 :  இந்தியாவில் 8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக உச்ச நீதிமன்றம் தமது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. இதற்கு என்னதான் தீர்வு?

– பா.ஆகாஷ், புது டெல்லி.

பதில் 8 : ஏதோ உச்சநீதிமன்றம் இதற்கு முன்பு சுட்டிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு ஏற்பட்டுவிட்டதுபோல நினைத்து இப்போது இந்தக் கேள்வியை எழுப்பும் நண்பரே, முந்தைய பதிலே (மவுனம்) இதற்கும் இருந்தால் வியப்பில்லை – வழமை!

  • • •

கேள்வி 9 :  பீகார் தேர்தலின்போது வாக்குப் பதிவுக்கு முன்பாகவே 20,000 ஓட்டுகள் சேர்க்கப்பட்டன என்பது உண்மையா?

– ம. முனியாண்டி, ஆரணி.

பதில் 9 : உறுதிப்படுத்தப்படாத செய்தி. சரியான தகவலுடன் அரசியல் கட்சிகள் வழக்கு மன்றத்தை நாட வேண்டும்.

  • • •

கேள்வி 10 :  “ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த   நாடும் தண்டிக்கப்படும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருப்பது  எதேச்சாதிகாரப் போக்கு அல்லவா?

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– த. திருநாவுக்கரசு, தென்காசி.

பதில் 10 : உலகத்திற்கே ராஜா – ‘நானே ராஜா’ என்று ஆட்டம் போடுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதிவேகம் எப்போதும் நல்லதல்ல. இழுக்க இழுக்க ரப்பர் கயிறு அறுந்துவிழுவது தவிர்க்க இயலாதது என்பது இயற்கைச் சட்டம் (Natural Law).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *