சென்னை, நவ. 8 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தினத்தையொட்டி (7.11.2023) எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கம் மற்றும் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று (7.11.2023) நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை வகித்தார். நிகழ்வில் அலுவலகத்தின் முகப்பில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியின் மார்பளவு சிலையை சிஅய்டியு தொழிற்சங்க மாநில தலைவர் அ.சவுந்தர ராஜன் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், அலுவலகத்தில் புதுப் பிக்கப்பட்ட எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கினை திறந்து வைத்தார்.
பி.ராமமூர்த்தியின் மகள்கள் வைகை, பொன்னி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பேசும் போது, ‘‘தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கு வதில் களநாயகனாக திகழ்ந்தவர் பி.ராமமூர்த்தி. இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள்களில் தமிழ்நாடு முழுவதும் விழாக்கள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
மூத்த தலைவர் என்.சங்கரய்யா காணொலிப் பதிவு வாயிலாக பேசும்போது, “உலகையே உலுக்கிய நவம்பர் புரட்சி தினத்தில், இந்த 2 தலைவர்களின் அரங்கம் மற்றும் சிலை திறப்பு அனைத்து நிர்வாகிகளுக்கும் உற்சாகத்தை அளிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், ஏ.கே.பத்மநாபன், மாநில குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன், கட்டட பொறியாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
இதேபோல தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினத்தையொட்டி, கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில், மூத்ததலைவர் இரா.நல்லகண்ணு கொடியேற்றினார். நிகழ்வில் கட்சியின் துணை செயலாளர் வீரபாண்டியன் எழுதிய ‘இஸ்ரேல்-ஹமாஸ், போரும் விடுதலையும்’ எனும் நூலை கட்சியின் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பினாய் விஸ்வம் வெளியிட, மமக தலைவர் எம்.எச்.ஐவாஹிருல்லா பெற்றுக்கொண்டார்.