அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம் ஏன்?

Viduthalai
5 Min Read

அரசியல்

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் ஒன்றிய அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் ஓபிசி பிரிவினர்க்கான 27 சதவீத இட ஒதுக்கீடு முறையாக நிறைவேற்றப்படவில்லை.

அரசு அளித்த தகவலின்படியே, ஒன்றிய அரசுத்துறையில் குரூப் ஏ பதவிகளில் 13 சதவீதம் மட்டுமே ஓபிசியினர் பணிகளில் உள்ளனர். பல அமைச்சகங்களில் ஒருவர் கூட இல்லை. ஒன்றிய அரசின் 89 செயலாளர் பதவி களில் ஒரு ஓபிசி கூட இல்லை. பொதுத் துறை நிறுவனங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

பல்கலைக்கழகங்களிலும் பேராசிரி யர் பதவிகளில் ஓபிசியினர்க்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இல்லை என நாடாளுமன்றத்தில் அமைச்சர் அளித்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

‘கிரிமிலேயர்’ என்று பொருளாதார அளவுகோலைப் புகுத்தி, வாய்ப்பு உள்ள பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு மறுத்ததன் காரணமாக, ஒன் றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவ னங்களில் எந்த ஒரு பதவியிலும் ஓபிசி பிரிவினர் 27 சதவீதத்தை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இதுமட்டுமல்லாமல், வருமான வரம்பு அடிப்படையில் மாத வருமா னத்தையும், விவசாய வருமானத்தையும் கணக்கில் கொண்டு ஓபிசி பிரிவினர்க்கு சான்றிதழ் மறுக்கப்படுகிறது. மூன்றாண் டுக்கு ஒருமுறை வருமான வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற அரசின் முந்தைய ஆணையையும் அரசே மதிக்கவில்லை.

மருத்துவப் படிப்பிலும் அகில இந்திய தொகுப்பு இடங்களில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், ஓபிசியினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாமல், ஒவ்வொரு ஆண்டும் 3000 இடங்களுக்கு மேல் ஓபிசி மாணவர்கள் வாய்ப்பை இழந்து போராடி பெற்ற பின்னரும், பொதுப் பிரிவு மதிப்பெண் பெற்ற ஓபிசி பிரிவி னர், 27 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப் பப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால், உயர்ஜாதியினரில் பொரு ளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது.

இதனையெல்லாம் கடந்து, தற்போது ஒன்றிய அரசில் இணை செயலாளர்கள் பதவிகளுக்கு நேரடி நியமனம் என்ற போர்வையில் இட ஒதுக்கீட்டை மறுத்து நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனி யார்மயமாக்கும் கொள்கையையும் அரசு வேகமாக அமல்படுத்த முனைந்து உள்ளது. ஏர் இந்தியா, பாரத் பெட்ரோ லியம் எல்.அய்.சி., உள்ளிட்ட துறைகளை தனியார்க்கு தாரை வார்க்கும் திட்டமும் அமலாக உள்ளது.

மண்டல் குழு பரிந்துரையில் கூறப் பட்டுள்ள ஓபிசி பிரிவினர்க்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, நீதித்துறையிலும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அளிக்கும் பரிந்துரையை நிறைவேற்ற அரசு எந்த முயற்சியும் எடுக்க வில்லை. ஒன்றிய அரசின் சமூக நலத்துறையைப் பிரித்து, பிற்படுத்தப்பட்டோர்க்கு என தனியாக அமைச்சகம் உருவாக்க வேண் டும் என்ற கோரிக்கையும், மண்டல் அறிக்கையில் தெரிவித்தபடி ஓபிசி பிரிவினர்க்கான இட ஒதுக்கீடு 52 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை யும், 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப் பில் ஜாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்த வேண்டிய சூழல் அதிகரித்து உள்ளது. மண்டல் குழு பரிந்துரையில் ஓபிசி பிரிவினர்க்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் நடை முறைப்படுத்தி 30 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்னமும் ஓபிசி பிரிவினர்க்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாத அவல நிலை உள்ளது.

இத்தகைய சமூக அநீதி பிற்படுத் தப்பட்டோர்க்கு இழைக்கப்படும் நிலை யில், பிற்படுத்தப்பட்டோர்க்கான கோரிக் கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நமது அகில இந்திய கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நமது கோரிக்கைகள்:

1. பொதுத் துறை நிறுவனங்கள், அர சுத் துறை தனியார்மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

2. 2021 மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் ஓபிசி உள்ளிட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பினையும் இணைத்து நடத்திட வேண்டும்.

3. பிற்படுத்தப்பட்டோரில் முன்னே றிய பிரிவினர் எனும் ‘கிரிமிலேயர் முறை’ முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

4. அனைத்து ஒன்றிய அரசின் துறைகளிலும், பணி நியமன ரிஜிஸ்டர் மற்றும் ரோஸ்டர் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

5. ஒன்றிய அரசின் மாநில அள விலான பணி நியமனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு குறையாமலோ அல் லது அந்தந்த மாநில இட ஒதுக்கீடு விழுக்காடுப்படி, எது அதிகமோ, அது அளிக்கப்பட வேண்டும். 

6. பிற்படுத்தப் பட்டோர்க்கு ஒன்றிய அரசில் தனி அமைச்சகம் உருவாக்கிட வேண்டும்.

7. தற்போது பிற்படுத்தப்பட்டோர்க்கு ஒன்றிய அரசு பணிகளுக்காக ஜாதி சான்றிதழ் தருவதில் கடைப்பிடிக்கும் வருமான வரம்பை உயர்த்த வேண்டும்.

8. இணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி நியமனங்களை ரத்து செய்து யு.பி.எஸ்.சி. தேர்வு மூலம் இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும்.

9. மண்டல் குழு பரிந்துரையை முழுமையாக அமல்படுத்தி, பிற்படுத் தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடு சத வீதத்தை 52 ஆக உயர்த்திட வேண்டும்.

10. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோ தமான உயர்ஜாதியினரில் பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினர்க்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

11. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, நீதித்துறை மற்றும் தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நிறைவேற்றிட வேண் டும்.

12. அப்ரண்டிஸ் சட்டத்தின்படி அந்தந்த மா நில ஓபிசி மக்கள்தொகை விழுக்காட்டின்படி இட ஒதுக்கீடு அளிக் கப்பட வேண்டும். (எ.கா. தமிழ்நாடு – ஓபிசி 76, எஸ்.சி.18).

13. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கிளை ஒவ்வொரு மாநில தலை நகரத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி, வருகிற மே 13-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தற்போது ஒன்றிய அரசின் அனைத் துத் துறைகளிலும்/நிறுவனங்களிலும் சமூக நீதி மறுக்கப்படும் சூழலில், நமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் தோழர்க ளோடு திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

தங்கள் 

கோ.கருணாநிதி 

பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பு

13.5.2023 காலை 10.30 மணி

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *