சென்னை, நவ.7- நாடு முழுவதும் வருகிற 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பாதுகாப்பாக கொண்டாட பொது மக்களுக்கு சில அறிவுறுத்தல்களை சென்னை மாநகர காவல்துறை வழங்கியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
* உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பசுமைப் பட்டாசுகளை காலை 7-8 மணி வரை, இரவு 7-8 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும்.
* இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் நிறுத்தியுள்ள இடங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் அமைந்துள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
* பட்டாசு விற்கும் கடைகளுக்கு அருகே சென்று புகைப் பிடிக்கவோ பட்டாசு வெடிக்கவோ கூடாது, ஈரமான பட்டாசுகளை சமையலறையில் உலர்த்தக் கூடாது.
* கால்நடைகளுக்கு அருகில் சென்று பட்டாசு வெடிப்பதால் அவை மிரண்டு ஓடி, நடந்து செல்பவர்கள் மீது முட்டி விபத்து ஏற்படும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும்.
* கையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு, கொளுத்திப்போடுவது மிக மிக ஆபத்தான விஷயம். இம்மாதிரி பட்டாசு வெடிக்கையில்தான், உடலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும். அதனால் கையில் வைத்து பட்டாசு கொளுத்துவதை தவிருங்கள்.
* விபத்து ஏற்பட்டால் காவல்துறை அவசர உதவி எண் 100, தீயணைப்பு உதவி எண் 101, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, தேசிய உதவி எண் 112 உள்ளிவற்றை அழைக்கலாம்.