திண்டுக்கல், நவ.19 பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்அய்ஆர் தான் என மேனாள் அமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் நேற்று (18.11.2025) நடை பெற்றது. இதில் மேனாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பீகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்.அய்.ஆர். தான். தமிழ்நாட்டில் 220 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி, பீகாரில் நிதிஷ்குமார் முதலமைச்சரானது போல் ஆவார்.
எஸ்அய்ஆரை எதிர்க்க ஒன்றும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் நடைபெற்றுள்ளது. எதற்காக இதை எதிர்க்கிறார்கள் என தெரியவில்லை. எஸ்அய்ஆர் படிவம் நிரப்பும் இடத்தில் திமுகவினர் தான் இருக்கிறார்கள். எஸ்அய்ஆரை வீடு வீடாகக் கொண்டு சேர்க்கவேண்டும். எஸ்அய்ஆர் பணியை அரசு ஊழியர்கள் புறக்கணித்துள்ளனர். 234 தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் உள்ளன. அதற்கான ஆட்களை நியமனம் செய்து ஊதியம் கொடுத்தால் தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் என்ன செய்வார்கள்? அரசு ஊழியர்கள் செய்வது சரியானதே. தமிழ்நாட்டில் எஸ்அய்ஆர் ஆல் ஒரு கோடி வாக்குகள் குறையும் என சீமான் சொல்வதை விட அதிகமான வாக்குகள் குறையும். திண்டுக்கல் தொகுதியில் மட்டும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வரை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
