எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!
தமிழ்நாட்டிலும் பா.ஜ.க.வினரின் தேர்தல் தில்லுமுல்லு!
“ஒரே நபருக்கு 7 வாக்காளர் அடையாள அட்டை வழங்கிய தேர்தல் ஆணையம்” எனும் தலைப்பில், ‘விடுதலை’ நாளேடு 16.11.2025 ஞாயிறு அன்று,முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு, தேர்தல் ஆணையமும், பா.ஜ.க.வினரும் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதை, ’வாக்குத்திருட்டின் மற்றொரு முகம்’ என்றும் குறிப்பிட்டு அம்பலப்படுத்தி இருந்தது.
இந்த செய்தியை நேற்று (17.11.2025) படித்த, கோடம்பாக்கம் விசுவநாதபுரம் முதல் தெருவில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத தோழர் ஒருவர், ‘‘ராஜஸ்தான் மாநிலம் சீர்மாதுபுர் பகுதியில் வசிக்கும் மேகராஜ் பட்வா கூறியுள்ளது போல், கடந்த மாதம் (அக்டோபர்) நான் வீட்டில் இல்லாத போது, எனது வீட்டிலும் பா,ஜ.க.வைச் சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணும் வந்திருந்து, ’வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? உங்களுக்கு ஓட்டு இருக்கிறதா? இல்லையா? உங்கள் ஓட்டை நாங்கள் பதிவு செய்து தருகிறோம்’ என்று கேட்டிருக்கிறார்கள். எனது மனைவி, ’இதைப்பற்றி எனது கணவனிடம் கூறுகிறேன்’ என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, பிறகு என்னிடம் கைபேசி வழியாக நடந்தவற்றை விவரித்தார். அப்போது நான் அதை பொருட்படுத்தவில்லை.
ஆனால், 16.11.2025 அன்றைய ‘விடுதலை’யில் வந்த செய்தியைப் படித்த பிறகுதான், தமிழ்நாட்டிலும் ஒருவருக்குப் பல அடையாள அட்டையை வழங்கி மோசடி செய்யும் வேலையைத் தொடங்கி விட்டார்கள் என்பது உறைத்தது” என்று பதட்டத்துடன் கூறினார். தேர்தல் ஆணையம் செய்யும் மோசடிகளைத் தாண்டி தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்துகொண்டு பா.ஜ.க.வினரும் ஒரு நபருக்கு பல தேர்தல் அடையாள அட்டைகளைப் பெற்றுத்தரும் மோசடியில் தமிழ் நாட்டிலும் ஈடுபட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– மணிமேகலை, ஆவடி
