சென்னை, நவ. 17- வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 15 மாவட்டங்களில் இன்று (17.11.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும். இதன் காரணமாக இன்று (நவ.17) தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழ்நாட்டில் சில இடங்களிலும், 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், 20ஆம் தேதி ஓரிரு இடங்களிலும், 21, 22ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை உள்ளிட்ட
7 மாவட்டங்களில் கனமழை
7 மாவட்டங்களில் கனமழை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (18.11.2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களிலும், வரும் 19ஆம் தேதி மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 20ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 21ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று (17.11.2025) மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு வானிலை ஆய்வு மய்ய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
