‘இதுவும் பகவான் செயலோ!’

Viduthalai
2 Min Read

நடைப்பயணமாகச் சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பேருந்து புகுந்து இருவர் பலி

திருத்தணி, மே 10 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அண்டபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிக்கு நடைப்பயணமாகச் சென்று வருகின்றனராம். அந்த வகையில் கடந்த 5 ஆம் தேதி 31 பேருடன் குழுவாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திண்டிவனத்தில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் (8.5.2023) இரவு 11 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பொன்பாடி என்ற இடத்தில் நடைப்பயணமாக குழுவினர் சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அதிவேகமாக சாலையோரம் சென்று கொண்டிருந்த அக்குழுவினர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சீதாராமன் (வயது 20), நாராயணன் (45) ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் முகேஷ் கண்ணன் (14), வடி வழகன் (37) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி காவல்துறையினர், படுகாய மடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய் விற்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து காரணமாக திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விபத்தில் உயிரிழந்த சீதாராமன் சென்னையில் உள்ள பிரபல கார் கம்பெனியில் வேலை செய்து வந்தவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விபத்தில் உயிரிழந்த மற்றொரு நபரான நாராயணன்கீழ் மண்ணூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்திற்கு காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநர் ராமனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *