தூத்துக்குடி, நவ.15- குழந்தைகள் நாளை முன்னிட்டு ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை அதன் சிறப்பு திட்டமான “வானமே எல்லை” எனும் ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை நகரிலிருந்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்களது வாழ்நாளில் முதன் முறையாக விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
விமானப் பயணம்
அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்ட இந்த முன்முயற்சியில், ஒரு திருநங்கை மாணவர் மற்றும் ஒரு பார்வை குறைபாடுள்ள மாணவரும் இணைந்திருந்தனர். இதன் மூலம் “குடும்ப பின்னணி அல்லது திறன் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கனவு காணவும் உயர பறக்கவும் உரிமை உண்டு” என்ற செய்தி வலியுறுத்தப்பட்டது. அனந்தம் நிறுவனம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் வேல்ஸ் வித்யாலயா கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து தகுதியான குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் மறக்க முடியாத அனுபவங்களும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
குழந்தைகள் நாளையொட்டி இந்த விமான பயணத்தில், தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குழந்தைகளுடன் பயணித்து, அவர்களுடன் கலந்துரையாடி ஊக்கம் அளித்ததோடு, குழந்தைகளின் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார். அவருடன் இசையமைப்பாளர் மற்றும் ரெயின்டிராப்ஸ் நல்லெண்ண தூதர் ஏ.ஆர்.ரெஹானா, ரெயின்டிராப்ஸ் நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர் அரவிந்த் ஜெயபால், விஜிபி குழுமத் தலைவர் டாக்டர் வி.ஜி.பி.சாந்தோசம், மாநில திட்ட ஆணைய உறுப்பினர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், அனந்தம் நிறுவனர் பகீரதி ராமமூர்த்தி, ஆர்கானிக் உணவு நிபுணர் மண் வாசனை மேனகா மற்றும் ரெயின்டிராப்ஸ் குழுவினரும் பங்கேற்றனர்.
