கும்மியடி பெண்ணே கும்மியடி! – இந்தக்
குவலயம் கேட்கவே கும்மியடி!!
கும்மியடி பெண்ணே கும்மியடி! – பெரியார்
கொள்கை மலரவே கும்மியடி!!
தாயென முந்தியே வந்தோமே! – இந்தத்
தாரணி ஆண்டுமே நின்றோமே!!
நோயென வந்த தனியுடமை – அதில்
நுடங்கித்தான் விட்டது நம்முரிமை!!
(கும்மியடி)
உரிமைகள் மீட்கவே கும்மியடி! – இந்த
உலகையும் மாற்றவே கும்மியடி!!
பிரிவினை நீக்கவே கும்மியடி! – சாதி
பேதங்கள் போக்கவே கும்மியடி!!
(கும்மியடி)
ஆணுக்கே நாமும் அடிமையென்றான் – எரியும்
அடுப்பிலே பூட்டியே அடக்கிவைத்தான்!!
பேணையும் ஈறையும் தேடவைத்தே – நம்
பிள்ளைக்கும் நம்மைப் பணியவைத்தான்!!
(கும்மியடி)
(உரிமைகள்)
பெரியார் அய்யாதான் வந்தபின்னே! – நாம்
பெற்றோமே கல்வி உரிமைகளை!!
சரிக்குச் சரியாக வேலைகளில் – நாமும்
தரத்தினால் வென்றோமே போட்டியிலே!!
(கும்மியடி)
(உரிமைகள்)
ஆட்டுக்கும் வாலை யளந்தவனை – நாம்
ஆராய்ந்தே தூரத்தில் தள்ளிவைப்போம்!
கேட்டுக்குக் காரணம் யாதென்றே – நாம்
கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்போம்!!
(கும்மியடி)
(உரிமைகள்)
கைகட்டும் காலமும் போனதடி! – கல்வி
கற்று நிமிர்கின்ற காலமடி!!
வாய்கட்டும் காலமும் போனதடி! – இனி
வானைத் தொடுகின்ற நேரமடி!!
(கும்மியடி)
(உரிமைகள்)
ஏழை எளியவர் ஏற்றமுற – இங்கு
எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டுமடி!
காளையர் கன்னியர் யாவருமே – வந்து
களத்தினில் நின்றாலே ஆகுமடி!!
(கும்மியடி)
(உரிமைகள்)
சாதி மதங்கள் இல்லையென்றே – பெரியார்
தந்த கொள்கையில் சேருங்கடி!
ஏதில்லை பேதமும் என்றுசொன்ன – பெரியார்
இயக்கத்தில் வந்திங்கே கூடுங்கடி!!
(உரிமைகள்)
(கும்மியடி)
– பாவலர் சுப.முருகானந்தம்
மாநிலச் செயலாளர் , பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
(குறிப்பு: பெண்களுக்கு இடையிலான கும்மிப் பாட்டு)
