மக்களவைத் தலைவருக்கு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்!
சென்னை, நவ. 8- மோசமான ரயில் விபத்துகள் குறித்து ரயில்வே நிலைக்குழு விவாதிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லாவுக்கு தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லாவுக்கு தி.மு.க. பொருளாளரும் மக்களவை உறுப் பினருமான டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதம் வருமாறு:- “சமீபமாக இரண்டு பெரிய ரயில் விபத்துகள் ஏற்பட்டு ஏராளமானோர் பலியானதுடன் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். அத்துடன் குறிப்பிடத்தக்க அளவிற்கு ரயில்வே சொத்துக்களும் நாசமாகி உள்ளன.
2.6.2023 அன்றுஒடிசா மாநிலம் பாலாசார் மாவட்டத்தில் ஏற்பட்ட முதலாவது ரயில் விபத்தில், 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு 296 பயணிகள் பலியானதுடன், 1200 பேர் காயமடைந்துள்ளனர்.
1995 ஆம் ஆண்டு பிரோஜாபாத்தில் நடைபெற்ற ரயில் விபத்திற்குப் பிறகு நடந்த விபத்தைக் காட்டிலும் மிகவும் மோசமானது என்பதோடு, உலகம் முழுவதிலும் 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற மிகவும் பேரழிவு என்று தான் இந்த ரயில் விபத்து குறித்து குறிப்பிட வேண்டியுள்ளது.
ரயில்வே அமைச்சரும், மூத்த அதிகாரிகளும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, பல நாட்கள் முகாமிட்டு நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகள் மேற்கொண்டனர் என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. இந்த விபத்து குறித்து சி.பி.அய். விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று நான் கருதுகிறேன். மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
இரண்டாவது ரயில் விபத்து அண்மையில் 29.10.2023 அன்று ஆந்திர மாநிலம் விஜய நகரம் பகுதியில் நடந்தது. இரண்டு பயணியர் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 14 பேர் பலியானதுடன் 50 பேர் காயமடைந்துள்ளனர். மனிதத் தவறுகள் இந்த விபத்துகளுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வமாக எதுவும் தெரியவில்லை. மேலே குறிப்பிட்ட இரண்டு விபத்துகளும் வருத்தமடையக் கூடிய ஒன்று. 5 மாத இடைவெளியில் இந்த இரண்டு ரயில் விபத்துகள் நடந்திருப்பது அனைத்துத் தரப்பினரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
இந்த விபத்துகள் தொடர்பான முழு விபரங்கள் எதுவும் ரயில்வே நிலைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்படவில்லை. கெட்ட வாய்ப்பான கவலைக்குரிய இந்த விபத்துகள் குறித்து நாட்டில் உள்ள மற்றவர்களைப் போல ரெயில் நிலைக்குழு உறுப்பினர்களும் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். சிறீலங்காவில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மோசமான ரயில் விபத்தைக் காட்டிலும் ஒடிசா விபத்து மிக மோசமானது என்பதால் அதை நிலைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.
5 மாதங்கள் கடந்தும் அவ்வாறு நிலைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரவில்லை.
பொது முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துமேற்குறிப்பிட்ட வேண்டு மென்றேநடைபெற்ற ரயில் விபத்துகள் பற்றி ரயில்வே நிலைக்குழு விரிவாக விவாதிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு தி.மு.க. பொருளாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.