சென்னை, நவ. 13 தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) சிறந்த முறையில் செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாளை (14.11.2025) நடைபெறவுள்ள விழாவில் கேடயங்கள் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தொடக்கக்கல்வி துறையின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யக் குழு அமைக்கப்பட்டது.
தேர்வுக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மாவட்டத்துக்கு தலா 3 என 38 மாவட்டங்களுக்கு 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வரும் நாளை (14.11.2025) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில் சிறந்த பள்ளிகளுக்கான கேடயத்தை அவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கவுள்ளார்.
பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, கற்றல்-கற்பித்தலில் புதிய உத்திகளைப் பின்பற்றுதல், கற்றல் அடைவுத் திறன், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள், கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், பன்முகத்திறன் வெளிப்பாடு ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டு சிறந்த அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
