“ஜாதி வெறியின் உச்சம்!”

Viduthalai
3 Min Read

நமது இன மக்கள் மற்ற நாட்டு மக்களைப் போன்று கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கண்துஞ்சாது, பசி நோக்காது, கால நேரம் பாராது ஓயாமல் உழைத்தவர் இன மீட்பாளரான தந்தை பெரியார். மனித குலம் ஜாதி மதப் பிணியில் இருந்து விடுபட்டு உயர்ந்தவர் தாழ்ந்தவர், மேலோர் – கீழோர் எனும் பாகுபாடின்றி ஒன்றுமையாக வாழவேண்டும் என்பதற்காக மனிதகுலத்தை பகுத்தறிவுக் கருத்துகளால் நாளும் பண்படுத்தி கூர்மைப்படுத்தியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.

மனிதன் ஜாதி எனும் சாக்கடையில் சிக்குண்டு சீரழிந்து வருவதை சகித்துக்கொள்ள முடியாத பெரியார் ஜாதி எனும் நோயை அழித்தொழிக்க அனுதினமும் அயராது பாடுபட்டவர். சமுதாய வளர்ச்சிக்கு – எழுச்சிக்கு, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ள ஜாதி எனும் கொடிய நோயை நாட்டை விட்டே விரட்டி அடிக்க களம்பல கண்டவர் ஜாதி ஒழிப்புப் போராளி தந்தை பெரியார்.

தந்தை பெரியார் தலைமையில், ஜாதி எனும் நோயை அழித்தொழிக்கும் ஜாதி ஒழிப்புப் போரில் 3000 கருஞ்சட்டைத் தோழர்கள் சிறையேகினர் என்பதும், அதில் 17 கருஞ்சட்டைத் தோழர்கள் தங்களது இன்னுயிரை ஈந்தனர் என்பதும் காலத்தால் அழிக்க முடியாத காலக் கல்வெட்டாகும். 

தமிழ்நாடு ஜாதி ஒழிந்த மாநிலமாக உருப்பெற்று எழவேண்டும் என்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய ஜாதி ஒழிப்புப் போராளி தந்தை பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஜாதிய வன்மங்களும், ஜாதி ஆணவக் கொலைகளும் வளர்ந்து வருவது நாட்டை இழி நிலைக்கு இட்டுச் செல்லும் ஆபத்தான போக்காகும்.

எடுத்துக்காட்டாக;

அண்மையில் விடுதலை நாளேட்டில் (18.04.2023)

ஜாதி ஆணவக் கொலைகளுக்கு முடிவு என்ன? எனும் தலைப்பில் வெளிவந்த தலையங்கம், நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதின் அவசியத்தை வெகுவாக வலியுறுத்தியுள்ளது.

முன்பெல்லாம் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்ற ஜாதி ஆணவப் படுகொலைகள், கடந்த அய்ந்து (2016 – 2021) ஆண்டுகளாக தனியார் அமைப்புகள் எடுத்த புள்ளி விவரத்தின் அறிக்கையில், தமிழ்நாட்டில் மட்டும் காதல் விவகாரத்தில் ஆண்டுக்கு 120 கொலைகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை அறிந்த ஜாதி ஒழிப்பு வீரர்கள், இன உணர்வாளர்கள், சமூகநல ஆர்வலர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மனித நேயப் பண்பாளர்கள், இளைஞர்கள் – மாணவர்கள், மகளிர் உள்ளிட்டோர் சொல்லொண்ணாத் துயரத்தில் மூழ்கியுள்ளனர். யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

உதாரணமாக, சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மாற்று ஜாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார் என்ற ஒரே காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டார் என்பது

” ஜாதி வெறியின் உச்சம் ! “

இக்கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு சாகும் வரையில் ஆயுள் சிறை தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது சற்றே ஆறுதல் தரக்கூடிய செய்தியாகும்.

இவ்வழக்கில் கொலையான கோகுல்ராஜூக்கும், யுவராஜூக்கும் தனிப்பட்ட முன்விரோதம் எதுவும் இல்லை என்றும், மாற்று ஜாதியைச் சேர்ந்த பெண்ணை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் காதலித்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டதையும் நீதிபதி சம்பத்குமார் அவர்கள் விவரித்திருப்பதை நோக்கும்போது, யுவராஜின் அப்பட்டமான ஜாதி வெறியின் கோரமுகம் நீதிமன்றத்தால் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. 

நீதிபதி சம்பத்குமார் அவர்களின் சிறப்பு வாய்ந்த இத்தீர்ப்பு, கொலையான கோகுல்ராஜின் குடும்பத் திற்கும் உறவினர்களுக்கும் சற்று ஆறுதல் தரக் கூடியதாக இருந்தாலும், வீட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டிய இளைஞர் கோகுல்ராஜ் சற்றும் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டது ஈடு செய்ய முடியாத பேர் இழப்பாகும்.

எனவே, ஜாதி ஒழிப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் பிரச்சாரத்தால், கடும் உழைப்பால் – போராட்டத்தால், ஜாதி எனும் நச்சுப்பாம்பின் விஷப் பை கிழித்தெறியப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது ஒருசில ஜாதி வெறியர்களால் ஆணவக் கொலைகள் தொடர்வது வேதனைக்குரியது. ஜாதி ஒழிப்பு வீரர் தந்தை பெரியார் பிறந்த இம்மண்ணில் ஆணவக் கொலைகள் இனிமேல் நடைபெறாமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும். 

ஆகவே, ஜாதி பேதமற்ற சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கிட, அனைவருக்கும் அனைத்தும் என்ற உயரிய நோக்கில் நாளும் தொய்வின்றி செயலாற்றிக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கட்சிகளைக் கடந்து, ஜாதி – மதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஜாதி ஒழிந்த மாநிலமாக உருப்பெற்று எழ உறுதியேற்போம்.

மடியட்டும் ஜாதிவெறி!

வளரட்டும் மனிதநேயம்!

– சீ. இலட்சுமிபதி

தாம்பரம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *