டப்ளின், நவ.12- அயர்லாந்தின் 3ஆவது பெண் அதிபராக கேத்தரின் கோனொலி பதவியேற்றார்.
சுயேச்சை வேட்பாளர்
அய்ரோப்பிய நாடான அயர்லாந்தில் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இடதுசாரியான கேத்தரின் கோனொலி (வயது 68) சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார்.
அவருக்கு அங்குள்ள இடதுசாரி கட்சிகளான சின்பெயின், தொழிலாளர் கட்சி மற்றும் சமூக ஜனநாயக் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன.
மாபெரும் வெற்றி
இந்த தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவிலேயே அவர் 63 சதவீதம் வாக்குகளை பெற்றார். எனவே அவர் அபார வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட மேனாள் அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்சே தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இஸ்ரேலை விமர்சித்தவர்
அதிபராக தேர்வான கேத்தரின் 1997ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 2006ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த கட்சியில் இருந்து விலகி சுயேச்சை வேட்பாளராக தொடர்ந்தார். மேலும் இஸ்ரேல்-காசா போரில் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்ததன் மூலம் பன்னாட்டு அளவில் அவர் கவனம் பெற்றார்.
இந்தநிலையில் தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரது பதவியேற்பு விழா அதிபர் மாளிகையில் நேற்று (11.11.2025) நடைபெற்றது. இதன்மூலம் நாட்டின் 10ஆவது மற்றும் மூன்றாவது பெண் அதிபராக அவர் பதவியேற்றார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
