சென்னையை அடுத்து மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை

Viduthalai
1 Min Read

அரசியல்

மதுரை,மே11 – சென்னையை போலவே மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமெடுத்துள்ளன. வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை தொடங்கி யுள்ளது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு 18 நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்துவதற்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 26 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலங்களும், வைகை ஆற்றில் இருந்து வசந்தம் நகர் வரை 5 கி.மீ. வரை பூமிக்கடியில் சுரங்கப் பாதையாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆர்.வி.அசோசியேட் நிறுவனம் தயாரித்து வருகின்றது. மதுரை ரயில்வே திட்டத்திற்காக நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 66 இடங்களில் மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றின் கீழ் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் செல்ல உள்ளது. இதனால் வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

கிடைக்கப்பெற்ற பாறை கற்களை ஆய்வகங்களில் வைத்து பல்வேறு வகையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 100 அடி கீழ் வரை பாறைகள் சேகரிக்கப் படுகின்றன. வைகை ஆற்றில் சுரங்கப்பதையில் ரயில் செல்ல இருப்பதால் மண்ணின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூன் மாதத்திற்குள் முடித்து அறிக்கையை அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அடுத்த ஆண்டு மெட்ரோ ரயில் பணிகளை துவக்கி 2027ஆம் ஆண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *