சென்னை, நவ.8- உற்பத்தி நிறுவனங்களில் அதிகவேலைவாய்ப்பை வழங்கி வரும் மாநிலங்களில் இந்தியா விலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக சென்னையில் ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை நடத்திய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
கருத்தரங்கு
இந்தியாவில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் குறித்த தரவுகளை ஆண்டு தோறும் மாநில வாரியாக சேகரிக்கும் பணியை ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் தோறும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி எப்படி உள்ளது?, அடுத் தடுத்த ஆண்டுகளில் தொழில் நிறுவ னங்களின் வளர்ச்சி எப்படி இருக் கும்?, எந்தெந்த துறைகளில் இந்த வளர்ச்சி அதிகமாக இருக்கும்? என்பன போன்ற புள்ளிவிவரங்களும் மதிப்பிடப்படுகின்றன.
இந்த அனைத்து தரவுகளையும் துல்லியமாக சேகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவ னங்களுடனான கருத்தரங்கு ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சென்னை மண்டல கள செயல்பாட்டு பிரிவின் சார்பில் சென்னையில் 6.11.2025 அன்று நடந்தது.
துல்லியமான தரவுகள்
இந்த கருத்தரங்கில் ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில்நிறுவனங்கள் கணக்கெடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் மனோகர், துணை இயக்குநர்கள் ரானாபீர், மூத்த புள்ளியியல் அதிகாரி மகாலட்சுமி ஆகியோர் பேசினர்.
தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் தங்களின் முதலீடு, பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை ஒன்றிய அரசின் இணையதளங்கள் வழியாக பதிவேற்றம் செய்வதன் மூலம் துல்லியமான தரவுகளை அரசு பெற முடியும் என்றும், இதற்கு தொழில் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் என கருத்தரங்கில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோன்று தொழில் நிறுவனங்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும், எக்காரணத்தை கொண்டும் மற்றவர்களுக்கு இந்த தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு உற்பத்தி
ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் உயர் அதிகாரிகள் கருத்தரங்கில் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் உள்ள பல மாநி லங்கள் தொழில்துறையில் நல்ல வளர்ச்சியை எட்டி உள்ளன.குறிப்பாக தமிழ்நாட்டிலும் தொழில்துறை ஆண்டு தோறும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டு வருகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு அதிக பங் களிப்பை கொடுத்து வருகிறது. இந்தி யாவில், இந்த சதவீதம் ஆண்டு தோறும் உயர்ந்து வருவதில் தமிழ்நாட்டின் பங்களிப்பும் இருக்கிறது
அதிக தொழிற்சாலை
இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு ஜி.வி.ஏ. எனப்படும் மொத்த மதிப்பு கூட்டல் என்ற அளவீட்டின் மூலம் மதிப்பிடப்படுகிறது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தி யாவில் இந்த மதிப்பீடும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இரும்பு, உணவுப்பொருட்கள் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, மோட்டார் வாகனங்கள் உற்பத்தி, கெமிக்கல் மற்றும் மருந்து பொருட்கள் உற்பத்தி போன்ற தொழில் நிறுவனங்கள் மூலம்தான் ஜி.வி.ஏ. எனப்படும் மொத்த மதிப்பு கூட்டல் மதிப்பீட்டின் அளவு ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளும் இங்கு தான் உள்ளன. இருந்தாலும் தொழில் வளர்ச்சி குறித்த மொத்த மதிப்பு கூட்டல் குறியீட்டில் தமிழ்நாடு 3-ஆம் இடத்தில் உள்ளது. மகாராட்டிரம் முதலிடத்திலும், குஜராத் 2-வது இடத்திலும் இருக்கிறது.
அதிக வேலைவாய்ப்பு
உற்பத்தி நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்பை வழங்கி வரும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.இதற்கு அடுத்தபடியாக குஜராத், மகாராட்டிரம், உத்தரப்பிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முடிவில், துணை இயக்குநர் சந்திர சேகர் நன்றி கூறினார். கருத்தரங்கில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
