கோவை, நவ.7 ‘தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் மத்தியில் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன’ என சிஅய்டியு மாநில மாநாட்டில், அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் தெரிவித்தார்.
சிஅய்டியு தொழிற்சங்க மாநாடு
சிஅய்டியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு, கோவையில் நேற்று (6.11.2025) தொடங்கியது. இந்த மாநாடு நவ. 9 வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் தொடக்கத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் செங்கொடியை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து பல்வேறு மாவட்டங் களில் இருந்து எடுத்து வரப்பட்ட தொழி லாளர்கள் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு ஜோதி மாநாட்டு வளாகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முதல்நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் சி.பத்மநாபன் வரவேற்றார்.
மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். சிஅய்டியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
அகில இந்திய அளவிலான மாநாடு அடுத்த மாதம் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 4 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
தற்போது நாட்டில் தொழிலாளர் களுக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. இதனை தீர்த்து வைப்பதற்காக சிஅய்டியு, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அரசியல் மாண்புகள், தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் மத்தியில் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக பணம் சம்பாதிப்பதில் மட்டும் குறியாக உள்ளன. இதனால் தேசிய வளங்கள் சுரண்டப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்கள் பிரச்சினை, அனல் மின்நிலைய தொழிலாளர் பிரச்சினை, நெய்வேலி தொழிலாளர்களின் பிரச்சினைகளில் சிஅய்டியு பல்வேறு போராட்டங்களை நடத்தி தொழிலாளர்களின் நலன் காக்க பாடுபட்டது. ஒன்றிய பாஜக அரசு, தொழிலாளர்களுக்கு எதிரான போக்குகளை கையாண்டு வருகிறது. தொழிலாளர் நலனுக்கான சட்டங்களை வலுவிழக்கச் செய்துள்ளது. தற்போது கொண்டு வரப்பட்ட தொழில் சட்டத் திருத்தத்தில் தொழிலாளர் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
அமெரிக்கா நமது நாட்டுக்கு அதிக வரி விதிக்கும்போது, பிரதமர் மோடி வாய் மூடி மவுனமாக உள்ளார். வருங்காலங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் நடைபெறும் போராட்டங்கள் வலுவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சிஅய்டியு தொழிற்சங்க மாநில தலைவர் சவுந்தரராசன் பேசும்போது, ‘‘ஒன்றிய அரசுக்கு தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லை. கம்யூனிசக் கொள்கையை கடைபிடிக்கும் சீன நாடு பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது’’ என்றார்.
இம்மாநாட்டில் சிஅய்டியு அகில இந்திய தலைவர் கே.ஹேமலதா, மூத்த தொழிற்சங்க தலைவர் டி.கே.ரங்கராஜன், மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் முதல் நாளான நேற்று, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்திருத்தத்தை கைவிட வேண்டும், தொழிலாளர் சட்டத் தொகுப்பு திரும்பப் பெறப்படவும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
